சென்னை : தெற்காசியாவின் முதல் இரவு ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்திய ரேசிங் பெஸ்டிவல் என்ற அமைப்பு நடத்தும் இந்த தொடரின் இரண்டாவது சுற்று சென்னையில் உள்ள முக்கிய வீதிகளில் நடைபெறுகிறது. பார்முலா 1 கார் பந்தயங்களை நாம் தொலைக்காட்சிகளில் எப்போதாவது பார்த்திருப்போம்.
நடிகர் அஜித் ஃபார்முலா 2 கார்களை ஓட்டும் வீரராகவும் திகழ்ந்து இருக்கிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் உள்ள பல ரசிகர்களுக்கு ஃபார்முலா கார் பந்தயம் குறித்து ஒரு அறிமுகம் இருக்கும். பொதுவாகவே கார் பந்தயங்கள், அதிவேகமாக காரை ஓட்டுவது என்பது தமிழக இளைஞர்களுக்கு பிடிக்கும்.

தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது ஃபார்முலா கார்களை நேரில் பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் இருப்பார்கள். அவர்களுக்காகத்தான் தற்போது பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. மூன்றரை கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த தளத்தில் 19 திருப்பங்கள் இருக்கின்றன. மேலும் நேப்பியர் பாலம்,போர் நினைவுச் சின்னம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பந்தயம் நடைபெறும்.
தீவுத்திடலில் தொடங்கி மீண்டும் தீவு திடலில் முடியும் அளவுக்கு இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் கார் பந்தயங்களில் மிகவும் முதன்மையானது ஃபார்முலா ஒன் கார்பந்தயங்கள் தான். அது சர்வதேச அளவில் நடைபெறும். அதன் பிறகு ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா 4 என பல வகைகளால் பிரிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ஃபார்முலா 4 காரின் வேகம் மணிக்கு 210 முதல் 240 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். மேலும் இதன் ஒரு காரின் விலை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். ஆரம்ப விலையே சுமார் 60 லட்சம் ரூபாய்க்கு மேல் இந்த காரின் விலை இருக்கும். மேலும் இந்த காருக்கு குறைந்த பட்சம் 1600 சிசி திறன் கொண்ட இன்ஜின் பயன்படுத்தப்படும்.
ஃபார்முலா ஒன் கார் மணிக்கு 372 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஆனால் ஃபார்முலா ஃபோர் 240 கிலோமீட்டர் வேகம் செல்லும் திறன் கொண்டது. இதனால் இந்த போட்டிகளில் பெரும்பாலும் ஜூனியர் வீரர்கள் தான் பங்கு பெறுவார்கள். சென்னை டர்போ ரைடர்ஸ் அணியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஐசக் டெமில்வி மற்றும் 17 வயதான ஜெய்டன் ஹேமில்டன் என்ற வீரர்கள் பங்கு பெற உள்ளனர்.