சென்னை : ஃபார்முலா ஃபோர் கார்பந்தயம் சென்னையில் சனிக்கிழமை இரவு தொடங்கியது. மதியம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கார் ஓடுதளத்தில் சில குறைகள் இருந்ததாகவும், அதனை மாற்றி அமைக்க ஃபார்முலா கார் பந்தயம் நடத்தும் சர்வதேச வாரியம் அறிவுறுத்தி இருந்தது.
இதனை அடுத்து கார் ஓடுதளத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இதனை அடுத்து தான் பயிற்சி சுற்றுகள் தொடங்கின. மதியம் 2 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இரவு 9 மணி ஆனதால் ரசிகர்கள் மிகவும் கடுப்பாகினர்.

ஆனால் இவ்வளவு நேரம் காத்திருந்ததற்கு நல்ல ஒரு பலனாக பயிற்சி பந்தயம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. ஃபார்முலா 4 கார் தங்கள் கண்முன் சீறிப்பாய்ந்து சென்றது. மாயி படத்தில் வாம்மா மின்னல் என்று வடிவேலு காமெடி ஒன்று இருக்கும். அது போல் ஆயிர கணக்கில் பணத்தை கொடுத்து ரசிகர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருக்க, கார் சல் சல் என்று பறந்தது.
இதனால் திருப்தியாக காரை பார்க்க முடியவில்லை என்ற ஒரு ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் தெரிந்தாலும், ஃபார்முலா 4 கார்பந்தயங்கள் இப்படி மின்னல் வேகத்தில் தான் நடக்கும் என்று தங்களை தாங்களே தேத்தி கொண்டனர். இந்த நிலையில் பயிற்சி பந்தயம் நடைபெற்ற போது திடீரென்று தெரு நாய் ஒன்று ரேஸ் நடக்கும் சாலைக்குள் குறுக்கே வந்தது.
நல்லவேளையாக பந்தய கார்களுக்கு முன்பு சென்ற வழிகாட்டி கார் அதனை பார்த்து மற்ற பந்தயக் கார்களை நிறுத்தியது. இதனை அடுத்து பயிற்சி சிறிது நேரம் ரேஸ் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு நாய் சென்ற பிறகு மீண்டும் பயிற்சி தொடங்கியது. சென்னையில் நாய் தொல்லை மிகவும் அதிகமாக இருக்கிறது என்று நாம் தினந்தோறும் செய்தித்தாள்களில் பார்த்திருக்கிறோம்.
நாய்கள் கடித்து பல குழந்தைகள் காயமடைந்ததையும் மாதம் இருமுறையாவது நாம் கேட்டு விடுவோம். ஆனால் நாய்களை அப்புறப்படுத்தாமல் சென்னை மாநகராட்சி அலட்சியமாக இருந்ததாக பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டினர். ஆனால் இன்று உலகமே கண்டு களித்த கார் பந்தயத்தில் பல பாதுகாப்பு வேலியையும் தாண்டி நாய் ஒன்று உள்ளே நுழைந்து இருப்பது சென்னையின் மானத்தை கப்பல் ஏற்றியது.
இப்படி கார் பந்தயத்தில் நாய்கள் உள்ளே நுழைவது இது முதல் முறை அல்ல. இந்தியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல்முறையாக கிராண்ட் பிரீ பந்தயம் உத்தரப்பிரதேசத்தில் நடத்தப்பட்டது. இதற்காக சர்வதேச தரத்தில் ஓடுதளம் அமைக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. அப்போது திடீரென்று ஒரு நாய் உள்ளே குறுக்கே வந்ததால் கார் பந்தய வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தற்போது மீண்டும் அதே போல் ஒரு சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கார் பந்தயத்தில் மட்டுமல்ல சென்னையில் எங்கு போட்டி நடந்தாலும் குறுக்கே இந்த கௌசிக் வந்தா என்ற நிலையில் நாய் எப்போதும் ஒரு என்ட்ரன்ஸ் கொடுத்து விடும். அண்மையில் சென்னையில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் ஆஸ்திரேலியாவும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது.
அப்போதும் கூட திடீரென்று ஒரு நாய் உள்ளே புகுந்ததால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதேபோன்று ஐபிஎல் போட்டி கூட நாய் அடிக்கடி சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் வரும். மேலும் சென்னையில் முன்பு நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் கூட நாய் தொல்லை அதிகமாக இருக்கும். நேற்று கார் பந்தய பயிற்சியின் போது நாய் குறுக்கே வந்ததை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இது சர்வதேச பந்தயமாக இருந்தாலும் சென்னை சாலைகளில் நடக்கின்றது. இப்போதாவது தெரிகிறதா சென்னைவாசிகள் எவ்வளவு கடினமான சூழலில் வாகனத்தை இயக்குகிறார்கள். இதனால் நாங்கள்தான் உண்மையான வீரர்கள் என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.