லண்டன்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கை காரணமாக இந்திய ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு, தங்க விலை, பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன.
உக்ரைனில் தங்கியுள்ள இந்திய மாணவர்களும் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். சொந்த நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ரஷ்யா மீது உலக நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. அந்த நிலையில், ரஷ்யா மீது ஃபார்முலா ஓன் கார் பந்தய அமைப்பும் நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யாவில் ஃபார்முலா ஓன் கார் பந்தயம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில், அதனை காலவரையின்றி ரத்து செய்வதாக ஃபார்முலா ஓன் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஃபார்முலா ஓன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலகம் முழுவதும் மக்களிடையே ஒற்றுமையையும், அன்பையும் பரப்பும் நோக்கில் ஃபார்முலா ஓன் நிறுவனம் அறிவித்துள்ளது.
உக்ரைனில் நடைபெறும் சம்பவங்கள் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஃபார்முலா ஓன் , இது போன்ற சூழலில் ரஷ்யாவில் ஃபார்முலா ஓன் பந்தயத்தை நடத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு விளையாட்டு துறையிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதே போன்று ரஷ்யா பல்வேறு சர்வதேச போட்டிகளிலிருந்து தனிமைப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.