சென்னை: இந்தியாவில் நடைபெறும் முதலாவது எப் 1 ரேஸ் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக கார்ப் பந்தயப் பிரியர்களுக்கு இது நிச்சயம் ஒரு பெரிய கனவு நனவானதற்குச் சமம்.
எப்படி உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி இந்தியாவில் நடந்தால் அத்தனை ரசிகர்களும் திரில்லாக இருப்பார்களோ, அதேபோலத்தான் இந்த எப் 1 ரேஸும் இந்திய கார்ப் பந்தயப் பிரியர்களுக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
இந்திய அளவில் பெரிய அளவில் எப் 1 வீரர்கள் உருவாகவில்லை என்ற போதிலும், இந்தியாவும் கார்ப்பந்தயங்களில் தனது முத்திரயை அவ்வப்போது காட்டியபடிதான் உள்ளது.
இந்தியாவின் முதலாவது எப் 1 வீரர் நரேன் கார்த்திகேயன் ஆவார். அவருக்கு அடுத்த அந்தப் பெருமையைப் பெற்றவர், கருண் சந்தக். துரதிர்ஷ்டவசமாக கருண் சந்தக் இந்தியாவின் முதல் எப்.1 ரேஸில் பங்கேற்க முடியாமல் போய் விட்டது. நரேன் மட்டுமே கலந்து கொள்கிறார்.
2005ம் ஆண்டுதான் முதல் முறையாக எப் 1 போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார் நரேன். அதற்கு முன்பு 12 சீசன்கள் வரை அவர் பல்வேறு இளநிலை போட்டிகளில் கலந்து கொண்டு வந்தார். இந்த ஆண்டுதான் இவர் ஸ்பெயினின் ஹிஸ்பானியா ரேசிங் அணியில் சேர்ந்தார். அவரை ஒரு ஆண்டு கான்டிராக்டில் ஹிஸ்பானியா அணி சேர்த்துள்ளது. இந்த அணியின் சார்பில் இந்தியாவின் முதல் எப் 1 போட்டியில் கலந்து கொள்கிறார் நரேன்.
நரேனின் பெரிய சாதனை என்று சொன்னால் 2005ல் அமெரிக்காவில் நடந்த கிராண்ட்ப்ரீ போட்டியில் ஜோர்டான் அணிக்காக கலந்து கொண்டு 4வது இடத்தைப் பிடித்ததுதான்.
புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்தான் இந்தியாவின் முதல் எப்1 ரேஸ் மைதானமாகும். இது தவிர இந்தியாவில் 2 கார்ப் பந்தய மைதானங்கள் மட்டு்மே உள்ளன. அதில் ஒன்று சென்னை அருகே இருங்காட்டுக்கோட்டையில் உள்ளது. இன்னொன்று கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வே ஆகும்.
இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மைதானம் 80களில் தொடங்கப்பட்டதாகும். மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் இதை உருவாக்கி நிர்வகித்து வருகிறது. இதன் நீளம் 3.717 கிலோமீட்டர் ஆகும். இதில் 12 வளைவுகளும், 3 நேர் பாதைகளும் உள்ளன.
கோவை அருகே உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வே, 2003ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மறைந்த கார்ப்பந்தய வீரர் கரிவரதன் நினைவாக இது உருவாக்கப்பட்டது. இவரது உறவினர்தான் நரேன் கார்த்திகேயன் என்பது நினைவிருக்கலாம்.
இந்த மைதானத்தில் தேசிய அளவிலான கோ கார்ட் பந்தயங்கள், மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மைதானத்தில் பார்முலா 3 ரக பந்தயங்கள் வரை நடத்த அங்கீகாரம் உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை 1904ம் ஆண்டு முதல்தான் கார்ப் பந்தயங்களில் இந்தியா கலந்து கொள்ள ஆரம்பித்தது. ஆனால் எப் 1 ரேஸை எட்டிப் பிடிக்க இத்தனை காலம் பிடித்துள்ளது. அதிலும் இந்தியாவிலிருந்தே இரண்டே இரண்டு வீரர்களைத்தான் நம்மால் தர முடிந்துள்ளது. எப் 1 உலகில் இந்தியா மிக நீண்ட தூரத்தில் உள்ள போதிலும், இன்று தொடங்கும் முதலாவது இந்திய எப் 1 போட்டிகள், ரேஸ் உலகில் இந்தியாவின் வேகத்தை மேலும் அதிகரித்து முன்னணி நிலைக்கு் உந்தித் தள்ள ஓரளவு உதவலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது.