மோசமான காற்று மாசு கொண்ட டெல்லி
வரும் நவம்பர் 24 முதல் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் தொடங்க உள்ளது. அதில் பங்கேற்க வந்துள்ள வெளிநாட்டு அணிகள் டெல்லியில் உள்ள காற்று மாசு பற்றி புகார் செய்கின்றன. டெல்லி உலக அளவில் மோசமான காற்று மாசு கொண்ட நகரங்களில் ஒன்று. நுரையீரலை பாதிக்கும் அளவு மோசமான அளவு அங்கே காற்று மாசடைந்து உள்ளது.
முகமூடி கூட இல்லையா?
இது பற்றி பேசிய சில வெளிநாட்டு வீராங்கனைகள் தங்கள் குடும்பங்கள் கவலையில் இருப்பதாகவும், இந்த காற்று மாசு தங்கள் உடலுக்கு நல்லதல்ல என்றும் குறிப்பிட்டனர். சில பயிற்சியாளர்கள் தங்களுக்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு முகமூடிகள் வழங்கவில்லை? என கேள்வி எழுப்புகின்றனர்.
சப்பைக்கட்டு கட்டும் நிர்வாகி
இந்திய குத்துச்சண்டை அமைப்பின் தலைவர் எல்லாவற்றுக்கும் தீவாளி தான் காரணம். தீபாவளி சமயத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் புகை தற்போது கலைந்து வருவதாக கூறி இருக்கிறார். குத்துச்சண்டை போட்டி மூடிய அரங்கத்தில் தான் நடக்க உள்ளது என்பதால் எந்த பிரச்சனையும் வராது என கூறியுள்ளார்.
|
நமக்கு தலை குனிவு
குத்துச்சண்டை வீராங்கனைகள் முகமூடி அணிந்து பயிற்சி பெறுவதை கண்டு டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கம்பீர், "அவமானத்தில் தலை குனிகிறேன். ஆனால், இங்கே யாருக்கு கவலை?" என பதிவிட்டு பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை குறிப்பிட்டு இருந்தார். நம் நாட்டின் தலைநகரே இந்த லட்சணத்தில் இருப்பதை கண்டு, நாமும் தான் தலை குனிய வேண்டும். இனியாவது நாம் காற்று மாசு பற்றிய விழிப்புணர்வை பெற வேண்டும். காற்று மாசை தடுப்பதை நம் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும்.