ஹம்பர்க்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் குத்துச்சண்டை வீரர் கவுரவ் பிதுரி உலக சாம்பியன் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில், குத்துச்சண்டை உலக சாம்பியன் போட்டி நடந்து வருகிறது. பாந்தம் வெயிட், 56 கிலோ எடைப் பிரிவின் அரை இறுதிக்கு நுழைந்து, டில்லியைச் சேர்ந்த கவுரவ் பிதுரி, இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பை உறுதி செய்திருந்தார்.

உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியின் அரை இறுதிக்கு நுழைந்துள்ள நான்காவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன், 2009ல் விஜேந்தர் சிங், 2011ல் விகாஸ் கிருஷ்ணன், 2015ல் சிவ தாப்பா ஆகியோர் அரை இறுதி வரை முன்னேறி, வெண்கலப் பதக்கத்தை வென்றனர். தற்போது அந்த வரிசையில், கவுரவ் பிதுரியும் இணைந்துள்ளார்.
இந்த உலக சாம்பியன் போட்டிக்கு, வைல்ட்கார்ட்' தகுதிச் சுற்று மூலம் களமிறங்கிய, இந்தியாவின் கவுரவ் பிதுரி, பாந்தம் வெயிட் (56 கிலோ) பிரிவில், அரை இறுதியில் அமெரிக்காவின் டியூக் ராகனைச் சந்தித்தார்.

துவக்கம் முதலே இருவரும் தடுப்பாட்டத்திலேயே ஈடுபட்டனர். இடையிடையே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்து பஞ்ச் கொடுத்தனர். இரண்டாவது ரவுண்டில், கவுரவ், அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இருப்பினும் ஒட்டுமொத்தமாக, அமெரிக்க வீரரின் ஆதிக்கமே இருந்தது. 5-0 என்ற ஒருமித்த முடிவின்படி, அமெரிக்க வீரர் டியூக் ராகன் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இறுதிப் போட்டியில், இங்கிலாந்தின் பீட்டர் மெக்கிரெயிலை சந்திக்கிறார் ராகன்.
முன்னதாக, இந்த உலக சாம்பியன் போட்டியில், இந்தியாவிந் அமித் பங்கால், 49 கிலோ எடைப் பிரிவிலும், கவிந்தர் பிஷித்,56 கிலோ எடைப் பிரிவிலும் காலிறுதி வரை நுழைந்தனர்.