பிரேசிலியா: கானா அணியின் நடுக்கள வீரர்களான சுல்லி முன்டாரி மற்றும் கெவின் பிரின்ஸ் போடெங் ஆகியோர் உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு கானாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையை கானா கால்பந்து கழகம் எடுத்துள்ளது. இருவரும் காலவரையின்றி சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் கானா கால்பந்துக் கழகம் அறிவித்துள்ளது.

முன்டாரி குறித்து கானா கால்பந்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடனடியாக முன்டாரி சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். 2014, ஜூன் 24ம் தேதி நடந்த ஒரு கூட்டத்தில் கானா கால்பந்துக் கழகத்தின் செயற்குழு உறுப்பினருடன் உடல் ரீதியாக மோதியது மற்றும் பிளாக் ஸ்டார்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினருடன் மோதியது தொடர்பாக அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு வீரரான போடெங் அணியின் பயிற்சியாளர் குவேசி அப்பையாவை ஆபாசமாகப் பேசி அவமதித்ததாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள கானா அணி, இன்று இரவு போர்ச்சுகல் அணியுடன் தனது கடைசி லீக் போட்டியில் மோதவுள்ளது. அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் கானாவுக்கு மிக மிக குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.