சென்னை : தமிழ் திரையுலகில் உச்சபட்ச நடிகரான விஜய் நடித்து வெளியாகும் கோட் திரைப்படம் குறித்து ஒரு சீக்ரெட் அப்டேட் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் தற்போதைய சினிமா நட்சத்திரங்களில் நடிகர் விஜய் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.
ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட ரசிகராக நடிகர் விஜய் வலம் வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியல் உலகில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இதனால் சினிமா துறையில் இருந்து தான் விரைவில் ஓய்வு பெற போவதாக நடிகர் விஜய் அறிவித்திருக்கிறார்.

நடிகர் விஜய் இன்னும் ஒரு படத்தில் தான் நடிக்கப் போவதாகவும் அதன் பிறகு அரசியலில் கவனம் செலுத்தப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது. இதனால் நடிகர் விஜய் நடித்து வெளியாகவுள்ள கோட் திரைப்படத்துக்காக அவருடைய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் நடிகர் விஜய் படத்தில் தோனி ஒரு காட்சியில் இடம்பெற போகிறார் என்பதை மறைமுகமாக அந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
கோட் திரைப்படத்தில் சென்னையில் ஒரு குண்டுவெடிப்பு நடக்க இருப்பதாகவும், அதனை தடுக்க விஜய் செல்வது போல் ஒரு காட்சி இருக்கிறது. அப்போது சென்னையில் சிஎஸ்கே போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் வெங்கட் பிரபு, கோட் திரைப்படத்தில் சிஎஸ்கே போட்டி நடைபெறுவது போல் ஒரு காட்சியை நாங்கள் அமைத்திருக்கிறோம்.
இதன் மூலம் யார் திரையில் தோன்றுவார் என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாம் என்று தோனியை அவர் மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார். வெங்கட் பிரபு தீவிர தோனியின் ரசிகர். அது மட்டுமில்லாமல் விஜய்க்கும் தோனிக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறது. சென்னையில் ஒரு முறை இருவரும் தனி தனி ஸ்டூடியோவில் தங்களது ஷூட்டிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, விஜய் அருகில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட தோனி, விஜய்யை அவரே நேரில் வந்து சந்தித்து அன்பை பரிமாறிக் கொண்டார். அது மட்டுமில்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறது. அப்போது சிஎஸ்கே அணியின் சிறப்பு விளம்பர தூதராக நடிகர் விஜய் விளங்கினார்.
அப்போதிலிருந்து தோனிக்கும் நடிகர் விஜய்க்கும் ஒரு நல்ல நட்பு ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் விஜய்யின் மகன் சஞ்சய் தீவிர தோனியின் ரசிகர் ஆவார். தோனி ஏற்கனவே திரைப்படத் துறையிலும் கால் பதித்து இருக்கிறார். தமிழ்நாடு மீது உள்ள பாசத்தால் தன்னுடைய முதல் திரைப்படத்தை தமிழில் தான் தயாரிப்பேன் என்று கூறி தோனி, லெட்ஸ் கெட் மேரிட் என்ற திரைப்படத்தை தயாரித்தார்.
இதில் ஹரிஷ் கல்யாண் நடித்தார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் தோனி நடிகர் விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியவரை வைத்து ஒரு படத்தை தயாரிக்க விருப்பம் தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக தான் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தோனி ஒரு காட்சியில் தோன்றியதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனால் நடிகர் விஜய்யும் தோனியும் ஒரே காட்சியில் இணைந்து வந்தால் திரையரங்கம் என்னவாகும் என்று நீங்களே யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.