டெல்லி: தண்ணீர் கூட கொடுக்கவில்லை என்று ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஜெய்ஷாவின் குற்றச்சாட்டிற்கு இந்திய தடகள சம்மேளனம் மறுப்புத் தெரிவித்திருந்தது. இதற்கு, ரியோவில் என்ன நடந்தது என்று எனக்கும் கடவுளுக்கும் தான் தெரியும் என்று ஜெய்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர் ஜெய்ஷா. போட்டி நடைபெறும் போது ஆங்காங்கே இந்தியாவின் சார்பில் தண்ணீரோ பானங்களோ வழங்கவில்லை. இதனால் தான் செத்துவிடுவேனோ என்று பயந்ததாக பகிரங்கமாக இந்திய தடகள சம்மேளனத்தின் மீது குற்றம் சாட்டினார் ஜெய்ஷா.

இதற்கு இந்திய தடகள சம்மேளனம் மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்திய அதிகாரிகளின் உதவியை ஜெய்ஷா மறுத்ததாகவும் இந்திய தடகள சம்மேளனம் ஜெய்ஷா மீது பதிலுக்கு குற்றம்சாட்டியது.
இந்நிலையில், "ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது இந்திய தடகள சம்மேளன அதிகாரிகள் யாருமே அங்கில்லை. அப்படி இருக்கும் போது அங்கு என்ன நடந்தது என்று அவர்களுக்கு எப்படி தெரியும். போட்டி நடந்த இடத்தில் கேமராக்கள் இருக்கின்றன. அதை வைத்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் நான் ஏன் பொய் சொல்ல வேண்டும். அரசிற்கும் சம்மேளனத்திற்கும் எதிராக என்னால் போராட முடியாது. ரியோவில் என்ன நடந்தது என்று எனக்கும் கடவுளுக்கும்தான் தெரியும்" என்று தடகள சம்மேளனத்தின் மறுப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஜெய்ஷா.