ஜகார்த்தா : நேற்று ஆசிய விளையாட்டில் ஹெப்டாத்லான் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் தங்கம் வென்றார். ஏழு விளையாட்டுக்களை உள்ளடக்கிய கடுமையான ஹெப்டாத்லான் போட்டியில் பல் வலியோடு பங்கேற்று இருக்கிறார் ஸ்வப்னா.
ஆசிய போட்டிகள் தொடங்க மூன்று நாட்கள் இருக்கும் போது, ஸ்வப்னாவுக்கு பல் வலி ஏற்பட்டுள்ளது. இந்திய சார்பாக ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கென இருந்த மருத்துவர்களை கலந்தாலோசித்த போது, பல் எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. எனினும், இப்போது அதை எடுத்தால் போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் வரலாம் என்பதால், மருந்துகள் மூலம் இப்போதைக்கு பல் வலியை குறைக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
எனினும், நாளாக நாளாக பல் ஆட்டமெடுத்து அதிக வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வலியோடு பங்கேற்று இருக்கிறார் ஸ்வப்னா. அது மட்டுமில்லாமல் தங்கமும் வென்று இருக்கிறார். ஹெப்டாத்லான் ஏழு தனித் தனி விளையாட்டுக்களை உள்ளடக்கிய மிகவும் கடினமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வென்ற ஸ்வப்னா, தன் தேவை குறித்து கூறிய ஒரு விஷயம் அதிர வைப்பதாக உள்ளது. ஸ்வப்னாவுக்கு கால்களில் 12 விரல்கள் உள்ளன. இதனால் அவரது பாதங்கள் சற்று பெரியதாக உள்ளது. அதற்கேற்ற ஷூ இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார் அவர். ஐந்து விரல்கள் உள்ளவர்களுக்கான சாதாரண ஷூவையே பயன்படுத்தி வருகிறார். அதை பயன்படுத்தி உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கும் போது மிகுந்த சிரமமாக உள்ளது எனவும் கூறுகிறார். எனினும், இந்த சிரமங்களோடு தங்கம் வென்று இருக்கிறார் ஸ்வப்னா.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018
ஸ்வப்னா பல முன்னணி உலக ஷூ பிராண்ட்களிடம் தன் 12 விரல்கள் கொண்ட கால்களுக்கு ஏற்ற ஷூ கிடைக்குமா என கேட்டுள்ளார். ஆனால், அனைவரும் மறுத்துவிட்டனர். அவருக்கென தனியாக ஷூ தயாரிக்க வேண்டும் என்பதே அவர்கள் மறுக்க காரணம். பல முன்னணி விளையாட்டு வீரர்களுக்கு பெரிய பிராண்ட்கள் இலவசமாகவே தனிப்பட்ட அளவில் ஷூக்கள் தயாரித்து வழங்குகிறார்கள்.
தங்கம் வென்ற பின்னாவது தனக்கு ஏற்ற ஷூ கிடைக்குமா என கேட்டுள்ளார் ஸ்வப்னா பர்மன். இந்தியாவில் விளையாட்டு வீரராக இருப்பது எவ்வளவு கடினம் என்பதற்கு ஸ்வப்னா ஒரு உதாரணம்.