அகார்தலா: ரியோ ஒலிம்பிக்ஸில் ஜிம்னாஸ்க் வால்ட் பிரிவில் இறுதிப்போட்டியில் பங்கேற்று 4-வது இடத்தைப் பிடித்த இந்திய வீராங்கனை தீபா கர்மாகருக்கு விளையாட்டு துறை உதவி இயக்குநர் பணி வழங்குவதாக திரிபுரா அரசு அறிவித்துள்ளது.
ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் இந்தியா இதுவரை தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், தீபா கர்மாகர் இவ்வளவு தூரம் பயணித்திருப்பது முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டி தான், தீபா பங்கேற்ற முதல் ஒலிம்பிக்ஸ் போட்டி ஆகும்.

இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் நான்காவது இடம் பெற்றார். இதன் மூலம், இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு நூலிழையில் கை நழுவிப்போனது. ஒலிம்பிக் வரலாற்றில் வால்ட் பிரிவின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் தீபா கர்மாகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிய தீபா கர்மாகருக்கு திரிபுராவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. இதனிடையே ஒலிம்பிக்கில் 4வது இடம் பிடித்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு அரசு பதவி வழங்குவதாக திரிபுரா அரசு அறிவித்துள்ளது. விளையாட்டுத் துறை உதவி இயக்குநர் பதவி அவருக்கு வழங்கப்படுகிறது.