டெல்லி : தமிழக தடகள வீரர் கோவிந்தன் லட்சுமணன் ஆசிய விளையாட்டில் தகுதி நீக்கத்தால் பதக்கத்தை தவறவிட்டாலும், அவரது சிறந்த செயல்பாட்டுக்காக அவருக்கு விளையாட்டு அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் பத்து லட்சம் பரிசு அளித்துள்ளார்.
தமிழக தடகள வீரர் கோவிந்தன் லட்சுமணன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார். அதில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மூன்றாவதாக வந்தும், பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

ஆடவர் 10000 மீட்டர் பந்தயத்தில் ஓடிய அவர், ஓடுபாதையின் ஓரத்தில் ஓடிய போது, முன்னே ஓடிய வீரர் மீது இடித்து விடும் நிலை வந்ததால், தவறுதலாக ஒரு காலை ஒரே ஒரு முறை எல்லைக் கோட்டுக்கு வெளியே வைத்துவிட்டார்.
இந்த ஓட்டப்பந்தயத்தின் முடிவில் கோவிந்தன் மூன்றாவதாக வந்தார். முதலில் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்டு பின், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது பதக்கம் நான்காவதாக வந்த வீரருக்கு அளிக்கப்பட்டது.
இந்தியா இதை எதிர்த்து புகார் அளித்தது, எனினும், நடுவர்கள் புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை. விதிப்படிதான் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என கூறிவிட்டனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிந்த நிலையில், பதக்கம் வென்ற வீரர்களுக்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் பண வெகுமதி அளிக்கப்பட்டது. தங்கம் வென்றவர்களுக்கு 40 லட்சம், வெள்ளி வென்றவர்களுக்கு 20 லட்சம், வெண்கலம் வென்றவர்களுக்கு 10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
கோவிந்தன் லட்சுமணன் சிறப்பான செயல்பாட்டை வழங்கியும், சிறிய தவறால் பதக்கத்தை இழந்தாலும், அவருக்கும் 10 லட்சம் பரிசு வழங்கியுள்ளது விளையாட்டு அமைச்சகம். இதை விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் வழங்கினார்.