
ஆதிக்கம்
இந்தியா - பிரிட்டன் அணிகள் இடையேயான வெண்கலப்பதக்கத்துக்கான ஹாக்கி போட்டியின், முதல் கால்பகுதியில் இரு அணிகளும் தீவிரமாக கோல் அடிக்க போட்டி போட்டன. இந்திய பெண்கள் அணியின் கோல் கீப்பர் சவிதா புனியா சிறப்பாக செயல்பட்டு பிரிட்டன் வீராங்கனைகளின் பல கோல் வாய்ப்புகளை தடுத்தார். இதனால் முதல் 15 நிமிடத்திற்கு கோல் ஏதும் வராமல் இருந்தது. பின்னர் 2வது கால்பகுதியில் ஆட்டம் பிக் அப் ஆனது. இரு அணி வீராங்கனைகளும் மாறி மாறி கோல் அடித்தனர். எனினும் அதில் பிரிட்டன் அணியே ஆதிக்கம் செலுத்தியது.

இந்தியா தோல்வி
இந்நிலையில், ஆட்டம் முடிய கடைசி சில நிமிடங்களே இருந்த நிலையில், 5 - 4 என பிரிட்டன் முன்னிலை வகித்தது. ஆனால் கடைசி வரை இந்திய அணியால் 5வது கோல் போட முடியாததால் ஏமாற்றமே மிஞ்சியது. கனவோடு காத்திருந்த வெண்கலப்பதக்கத்தை கைப்பற்ற முடியாமல் போனது. கடைசி வரை போராடியும் பதக்கம் வென்று கொடுக்க முடியவில்லை என, இந்திய வீராங்கனைகள் மைதானத்திலேயே அமர்ந்து கதறி அழுதனர். ஆட்டத்தின் தொடக்கத்தில் பிரிட்டன் அடிக்க முயன்ற பல கோல்களை தடுத்து இந்திய அணியின் சுவர் போன்று இருந்த கோல் கீப்பர் சவிதா, மனம் உடைந்து அழத்தொடங்கினார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் நெகிழ்ச்சி
இந்நிலையில், இந்திய மகளிர் ஹாக்கி அணியை பெருமைப்படுத்தும் விதமாக, பிரிட்டன் பெண்கள் ஹாக்கி அணி நிர்வாகம் சார்பில் ட்வீட் ஒன்று பதிவிடப்பட்டது. அதில், "என்ன ஒரு அற்புதமான போட்டி, என்ன ஒரு அற்புதமான எதிரணி இது. இந்திய மகளிர் ஹாக்கி அணி இந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். அடுத்த சில வருடங்களில் அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது" என்று ட்வீட் செய்துள்ளது. பிரிட்டன் அணியின் இந்த டிவீட்டுக்கு ரசிகர்கள் பலரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

வீராங்கனைகள் கண்ணீர்
முன்னதாக, கண்கலங்கிய வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்திருந்தார். போட்டி முடிந்த பிறகு இந்திய மகளிர் அணிக்கு தொலைப்பேசி மூலம் பேசிய பிரதமர், "நீங்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினீர்கள். ஒலிம்பிக் தொடருக்காக கடந்த 5 வருடமாக கடும் வியர்வைகளை நீங்கள் சிந்தியுள்ளீர்கள். உங்களது கடின உழைப்புக்கும், வியர்வைக்கும் பதக்கம் கிடைக்கவில்லை. எனினும் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான இளம் பெண்களுக்கு உங்களின் முயற்சி தூண்டுகோலாக இருக்கும்" என்றார். பிரதமர் பேசிக்கொண்டிருந்த போது மகளிர் அணியினர் எதுவும் பதில் அளிக்காமல் மௌனமாகவே இருந்தனர். எதுவும் பேச முடியாமல் அழுதுக்கொண்டே இருந்தனர். இதனை கேட்ட பிரதமர், "தயவு செய்து யாரும் அழாதீர்கள். ஒட்டுமொத்த தேசமும் உங்களை எண்ணி பெருமைக் கொள்கிறது. பல வருட போராட்டத்திற்கு பிறகு இந்திய ஹாக்கி அணி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இது அனைத்தும் உங்களுடைய கடின உழைப்பினால் கிடைத்த பயன் தான்" என்று ஆறுதல் கூறியிருந்தார். இந்த நிலையில், பிரிட்டன் அணியின் டிவீட்டும் இந்திய அணி வீராங்கனைகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications