சென்னை: 2024 உலகை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த முகேஷ் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நிலையில், அவரை எதிர்த்து ஆடிய சீன வீரர் டிங் லிரன் வேண்டுமென்றே தோற்றதாக பகிரங்கமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே ஃபிலாடோவ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து இருப்பதோடு டிங் லிரன் இறுதிப் போட்டியில் வேண்டும் என்றே தோல்வி அடைந்து இருக்கலாம் எனவும், உடனடியாக இறுதிப் போட்டி குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இது செஸ் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 14 சுற்றுப் போட்டிகள் கொண்ட 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முதல் 13 போட்டிகளின் முடிவில் குகேஷ் மற்றும் டிங் லிரன் தலா 6.5 புள்ளிகள் உடன் சமநிலையில் இருந்தனர்.
இந்த நிலையில் 14 வது போட்டியில் வெற்றி பெறும் வீரர் சாம்பியன் பட்டத்தை வெல்வார் என்ற நிலை இருந்தது. ஒருவேளை போட்டி டிரா ஆனால் டை பிரேக்கருக்கு போட்டி செல்லும் என்ற நிலை இருந்தது. சீன வீரர் பாதி போட்டியிலேயே டிரா செய்வதை நோக்கி நகர்வுகளை முன்வைத்தார்.
40 நகர்வுகள் முடிந்த பின் அவர் செய்த ஒரு மோசமான தவறை உணர்ந்த குகேஷ் அதை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றார். டிங் லிரன் செய்த தவறு புதிதாக செஸ் விளையாடும் நபர்கள் செய்யும் தவறை போல இருந்ததாக ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே கூறி இருக்கிறார்.
போட்டி டிராவை நோக்கி செல்லும் போது அவர் இது போன்ற தவறை செய்ததன் மூலம் வேண்டுமென்றே தோற்று இருக்கலாம் என அவர் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார். மேலும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து இருக்கிறார். செஸ் உலகில் ரஷ்யா முன்னணி நாடாக இருக்கும் நிலையில் அங்கிருந்து எழுந்திருக்கும் இந்த சந்தேகக் குரல் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
போட்டி முடிந்த உடன் டிங் லிரன் தான் செய்த தவறை பற்றி பேசுகையில், தான் சற்று தாமதமாகவே தவறான நகர்வு செய்ததை உணர்ந்ததாக கூறி இருந்தார்.