சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தி இருக்கிறார். அவர் இந்த இறுதிப் போட்டியின் முதல் சுற்றுப் போட்டியில் தோல்வி அடைந்த போது விஸ்வநாதன் ஆனந்த் அவருக்கு சொன்ன அறிவுரை ஒன்றை நினைவு கூர்ந்து நெகிழ்ந்தார்.
சீன செஸ் வீரர் டிங் லிரன் மற்றும் இந்தியாவின் குகேஷ் 14 சுற்றுகள் கொண்ட உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதினர். முதல் 13 சுற்றுகளின் முடிவில் இருவரும் தலா 6.5 புள்ளிகளை பெற்று சமநிலையில் இருந்தனர். கடைசி போட்டியில் வெற்றி பெறும் வீரர் சாம்பியன் பட்டத்தை வெல்வார் என்ற நிலையில் குகேஷ் கடைசி வரை உறுதியாக விளையாடி 14 வது சுற்று போட்டியில் வெற்றி பெற்று 7.5 புள்ளிகள் உடன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்த வரலாற்று வெற்றிக்கு பிறகு பேசிய குகேஷ், "2013 உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன், விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்தியதை நினைவு கூர்ந்தார். 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிடம் இருந்து சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. 2013இல் நான் அந்த போட்டியை வெளியே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது உள்ளே இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அப்போது மேக்னஸ் வெற்றி பெற்ற போது நான் இந்தியாவுக்காக சாம்பியன் பட்டத்தை மீண்டும் வெல்ல வேண்டும் என விரும்பினேன்." என்றார்.
மேலும், "சுமார் 10 ஆண்டுகளாக இதுவே எனது வாழ்வின் ஒரே முக்கிய நோக்கமாக இருந்தது. இதை நான் எனக்காகவும், எனது அன்புக்கு உரியவர்களுக்காகவும், எனது நாட்டுக்காகவும் செய்து முடித்ததை விட சிறப்பான விஷயம் எதுவும் இல்லை." என்றார் குகேஷ்.
மேலும், இந்த இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் தோல்வி அடைந்தது பற்றி பேசிய குகேஷ், "அந்த போட்டி மிகவும் கடினமானதாக இருந்தது. முதல் போட்டியில் தோல்வி அடைவது கடும் சவாலாக இருந்தது. 18 வயது வீரராக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு வந்து தோற்பது என்பது அவமானகரமான விஷயமாக இருந்தது. அதை கையாள்வது கடினமாக இருந்தது."
"அந்தப் போட்டிக்கு பின் நான் ஹோட்டல் அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன். விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் என்னுடன் லிப்ஃடில் வந்தார். அப்போது அவர் என்னிடம், 'நான் இறுதிப்போட்டியில் ஆடிய போது எனக்கு 11 போட்டிகளே மீதம் இருந்தன. உனக்கு 13 போட்டிகள் மீதம் உள்ளன என்பதை நினைவுபடுத்தினார். நான் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்தேன் என்பதையும் அவர் எனக்கு நினைவுபடுத்தினார். எனக்கான வாய்ப்புகள் வரும் என்றும் கூறினார்" என்றார் குகேஷ்.