சென்னை: இந்தியாவின் குகேஷ் 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வெற்றி பெற்று உலகின் இளம் செஸ் சாம்பியன் என்ற பட்டத்தை வென்று இருக்கும் நிலையில், "இது தான் செஸ் விளையாட்டின் முடிவு" என முன்னாள் உலக சாம்பியன் விளாடிமிர் கிராம்னிக் கூறி இருக்கிறார்.
இந்த இறுதிப் போட்டி குறித்து அவர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறார். குகேஷ் வெற்றியை குறைத்து மதிப்பிடும் வகையில் விளாடிமிர் கிராம்னிக் இவ்வாறு பேசி இருப்பது செஸ் உலகில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் குகேஷ் மற்றும் டிங் லிரன் மோதினர். இதில் 14 சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ் 7.5 - 6.5 என்ற கணக்கில் டிங் லிரனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். 14வது சுற்றுப் போட்டியின் முடிவில் முன்னாள் உலக செஸ் சாம்பியன் விளாடிமிர் கிராம்னிக் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறார்.
"இந்த இறுதிப் போட்டி குறித்து எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. சோகமாக இருக்கிறது. இதுதான் செஸ் விளையாட்டின் முடிவாக இருக்கும்." என விளாடிமிர் கிராம்னிக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவர் இந்த இறுதிப் போட்டியின் ஒவ்வொரு சுற்று போட்டிக்கு பின்னரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாவது போட்டிக்குப் பிறகு எந்த போட்டியும் சிறப்பாக இல்லை எனவும், தொழில் முறை செஸ் விளையாட்டு வீரர்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் இரண்டு வீரர்களும் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள் எனவும், செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று இருக்கும் வீரர்கள் பலவீனமாக ஆடுவது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
குகேஷ் மற்றும் டிங் லிரன் ஒவ்வொரு போட்டியிலும் தவறுக்கு மேல் தவறு செய்வதாகவும், வியூகங்களை வகுப்பதில் அவர்கள் தவறு செய்ததாகவும் விளாடிமிர் கிராம்னிக் முன்பே கூறி இருந்தார். இந்த நிலையில் இறுதிப் போட்டியின் 14வது சுற்று டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த போது மோசமான தவறு ஒன்றை செய்தார் டிங் லிரன்.
ஒரு தேர்ந்த செஸ் விளையாட்டு வீரர் அது போன்ற தவறை செய்ய மாட்டார் என செஸ் உலகில் விமர்சனம் எழுந்தது. அதை சுட்டிக்காட்டி, "இதுதான் செஸ் விளையாட்டின் முடிவு." என விளாடிமிர் கிராம்னிக் விமர்சனம் செய்து இருக்கிறார். மற்றொருபுறம் டிங் லிரன் வேண்டுமென்றே தோல்வி அடைந்திருக்கலாம் எனவும், இந்த இறுதிப்போட்டியை குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் தலைவர் கூறி இருக்கிறார்.