இந்தியாவின் மின்னல் மனிதன்.. யார் இந்த குரிந்தர்வீர் சிங் ? 100 மீ. ஓட்டத்தில் சாதனை
ராஞ்சியில் நடைபெற்ற தேசிய கூட்டமைப்பு கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பஞ்சாபைச் சேர்ந்த குரிந்தர்வீர் சிங் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்தார். 10.09 வினாடிகளில் இலக்கை எட்டித் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், இந்தியாவின் அதிவேக மனிதராக அவர் மிளிர்ந்தார். 10.10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் இச்சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.
இந்திய தடகள சம்மேளனத்தின் 10.16 வினாடிகள் என்ற தகுதி வரம்பை எளிதாகக் கடந்த குரிந்தர்வீர், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார். இந்திய கடற்படையில் பணிபுரியும் 25 வயதான இவரது சாதனைப் பயணம் அவ்வளவு சவாலானது.

ஓய்வு பெற்ற காவல்துறை காவலரும், தேசிய அளவிலான வாலிபால் வீரருமான தந்தை கமல்ஜீத் சிங்கின் விளையாட்டு ஆர்வத்தை குரிந்தர்வீர் முன்னுதாரணமாகக் கொண்டார். கிராமப்புற மைதானங்களில் ஓடிப் பழகிய இவர், 2018ல் இளையோர் தேசிய அளவில் முத்திரை பதித்தார். எனினும், கடுமையான செரிமானக் கோளாறுகள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளால் அவர் பெரும் பின்னடைவைச் சந்தித்தார்.
குறுகிய தூர ஓட்டத்தில் இந்தியர்களுக்குத் திறனில்லை என்ற விமர்சனங்களை எதிர்கொண்ட குரிந்தர்வீர், அனைத்து தடைகளையும் மன உறுதியுடன் வென்றெடுத்தார். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனில் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹில்லியரின் வழிகாட்டுதலில் தீவிரப் பயிற்சி பெற்று மீண்டும் களமிறங்கினார். இத்தொடரில் சக வீரரான அனிமேஷ் குஜூருடன் இவருக்கு தேசிய சாதனைக்காகக் கடும் போட்டி நிலவியது.
அரையிறுதியில் அனிமேஷ் குஜூர் படைத்த சாதனையை, அடுத்த 24 மணி நேரத்திற்குள் இறுதிப்போட்டியில் குரிந்தர்வீர் சிங் தகர்த்தெறிந்தார். வெற்றிக்குப் பிறகு மைதானத்தில், "வேலை இன்னும் முடியவில்லை, பொறுத்திருங்கள் நான் இன்னும் களத்தில் தான் இருக்கிறேன்" என வாசகம் அடங்கிய குறிப்பு ஒன்றை காட்டி, தனது அடுத்த இலக்குகளையும் அவர் உணர்த்தினார்.


Click it and Unblock the Notifications

