ஹர்திக் பாண்டியா அதிரடி
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போனவர். களத்தில் மட்டுமில்லாமல், வாழ்விலும் திடீரென அதிரடியில் இறங்கி தன் காதலி நடாஷா ஸ்டான்கோவிக்கை யாருக்கும் சொல்லாமல் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் செய்து கொண்டார் ஹர்திக் பாண்டியா.
காயம்
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பின் அவர் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது அவருக்கு ஆறுதலாக இருந்தார் நடாஷா ஸ்டான்கோவிக். சிகிச்சைக்கு பின் ஓய்வில் இருந்தார் ஹர்திக் பாண்டியா.
நிச்சயதார்த்தம்
2020 ஜனவரி 1ஆம் தேதி திடீரென ஹர்திக் பாண்டியா, தன் காதலி நடாஷா ஸ்டான்கோவிக்குடன் படகில் வைத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அந்த நிகழ்வில் அவரது நண்பர்கள், குடும்பத்தினர் என யாரும் பங்கேற்கவில்லை.
பெற்றோருக்கு கூடத் தெரியாது
அது மட்டுமின்றி, அவர்களின் நிச்சயதார்த்தம் குறித்து ஹர்திக் பாண்டியாவின் பெற்றோருக்கு கூடத் தெரியாது என்பது தான் இதில் வேடிக்கை. துபாய்க்கு சுற்றுலா சென்ற இடத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லாக்டவுன்
பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஹர்திக் பாண்டியா, தன் சகோதரர் க்ருனால் பாண்டியாவுடன் ஒரே வீட்டில் வசித்தார். ஹர்திக் பாண்டியாவுடன் நடாஷா ஸ்டான்கோவிக்கும் உடன் இருந்தார். அப்போதே இருவரின் திருமணம் குறித்த கேள்விகள் எழுந்தன.
திடீர் திருமணம்
லாக்டவுனுக்கு இடையே மே 31 அன்று ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் திருமணம் எளிய முறையில் வீட்டிலேயே நடைபெற்றது. அதுவும் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாகவே அமைந்தது. அப்போது நடாஷா ஸ்டான்கோவிக் கருவுற்று இருக்கும் தகவலையும் பகிர்ந்து கொண்டார்.
ஆண் குழந்தை
இந்த நிலையில், ஜூலை 30 (வியாழக்கிழமை) அன்று ஹர்திக் பாண்டியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை பகிர்ந்து கொண்டார். நடாஷா ஸ்டான்கோவிக்கும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் வாழ்த்து
குழந்தையின் கைகளை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார் ஹர்திக் பாண்டியா. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அவர் இந்த தகவலை பகிர்ந்த ஒரு மணி நேரத்துக்குள் 8 லட்சம் லைக்குகளுக்கும் மேல் குவிந்தது. வாழ்த்துக்கள் பாண்டியா!