லக்னோ: புரோ கபடி லீக் போட்டியில் உ.பி. யோத்தா - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், அதிக திருப்பங்கள் கொண்ட சினிமாவுக்கு இணையாக இருந்தது.
புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டிகள் நடந்து வருகின்றன. 12 அணிகள், இரண்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள், தற்போது நடந்து வருகின்றன.
உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடந்த ஆட்டத்தில், பி மண்டலத்தில் உள்ள உ.பி.,யோத்தா அணியும், ஏ மண்டலத்தில் உள்ள ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின. ஆட்டத்தின் துவக்கம் முதல், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி, அதிரடி ஆட்டத்தின் மூலம், உ.பி., யோத்தா அணிக்கு கடும் சவால் விடுத்தது. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தாலும், உ.பி. யோத்தா அணி 15-12 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
முந்தையப் போட்டியில், யு மும்பா அணிக்கு கடும் சவால் விடுத்த உ.பி. யோத்தா அணியின் ரிஷாங்க் தேவாடிகா மற்றும் சாகர் கிருஷ்ணா ஆகியோர் தலா, 6 புள்ளிகள் எடுத்து, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை திணறடித்தனர்.
இரண்டாவது பாதி துவங்கியதும், ஒரு பாட்டில் பூஸ்ட் சாப்பிட்டு வந்த மாதிரி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியினர் படுவேகமாக புள்ளிகளை சேகரிக்கத் துவங்கினர். விகாஸ் கண்டோலா, 9 புள்ளிகள், சுரேந்தர் நாடா, 7 புள்ளிகள் என, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியினர், முதல் பாதியில் பெற்ற புள்ளிகளை விட, இரண்டாவது பாதியில் இரு மடங்கு புள்ளிகளை சேகரித்தனர்.
என்ன நடக்கிறது, ஏதோ மாயாஜாலம் நடக்கிறதா என்று வியந்தபடி, உ.பி., யோத்தா அணியினர் விளையாடினர். சற்று சுதாரித்து அவர்கள் புள்ளி சேர்த்தால், ஹரியானா ஸ்டீலர்ஸ், அதற்குள், இரண்டு புள்ளிகளைப் பெற்று வந்தனர். இறுதியில், 36 -29 என்ற புள்ளிக் கணக்கில், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி அமோக வெற்றி பெற்றது.
இந்த வெற்றியையும் சேர்த்து, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி, 5 போட்டிகளில், 2 வெற்றி, ஒரு தோல்லி, 2 டையுடன், 17 புள்ளிகளைப் பெற்று, ஏ மண்டலத்தில், இரண்டாவது இடத்தில் உள்ளது.
உ.பி., யோத்தா அணி, 7 போட்டிகளில், 3ல் வெற்றி, 3ல் தோல்வி, ஒரு டிராவுடன், 20 புள்ளிகளைப் பெற்று, பி மண்டலத்தில், இரண்டாவது இடத்தில் உள்ளது.