கொல்கத்தா : ஆசிய விளையாட்டில் நேற்று முன்தினம், இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் ஹெப்டாத்லான் விளையாட்டில் தங்கம் வென்றார். இந்தியா முதன்முறையாக இந்த விளையாட்டில் தங்கம் வெல்கிறது.
தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மன் ஏழ்மை பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை ரிக்க்ஷா ஓட்டுனர். தற்போது படுக்கையில் உடல்நலம் குன்றி இருக்கிறார். அவரது தாய் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த பின்னணியில் இருந்து வந்த ஸ்வப்னா கடுமையான உழைப்பின் பயனாக ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார். அவர் தங்கம் வென்ற காட்சியை தொலைக்காட்சியில் கண்ட அவரது தாய் கதறி அழும் காட்சிகள் வெளியாகி இந்தியாவின் தாய் பாசம் எத்தகையது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ஸ்வப்னா தங்கம் வென்றார் என்ற தகவலை தொலைகாட்சியில் கண்ட அவரது தாய் "ஓ" என அழுகிறார். தொடர்ந்து, தன் வீட்டில் சிறிதாக அமைக்கப்பட்ட காளி சிலை முன் விழுந்து கதறி அழுகிறார்.
ஸ்வப்னா பங்கேற்ற போட்டி தொடங்கியது முதல் அவர் அந்த காளி சிலை முன் அமர்ந்து வேண்டிக் கொண்டு இருந்தார் என கூறப்படுகிறது. அதன் பின்பு வென்ற செய்தி கேட்டு, அதைக் கண்டு தன் பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018
ஸ்வப்னாவுக்கு மேற்கு வங்காள முதல்வர் பத்து லட்ச ரூபாய் பரிசும், அரசு வேலையும் அறிவித்துள்ளது. ஸ்வப்னா இந்த போட்டியில் கடுமையான பல் வலியோடு பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.