சர்வதேச அளவில் சாதனை
ஒடிசாவில் ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த டூட்டி சந்த், தன்னுடைய சகோதரி சரஸ்வதி சந்தை பார்த்து ஓடத் துவங்கினார். ஆனால் சரஸ்வதி சந்திற்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்த நிலையில், டூட்டி சந்த், சர்வதேச அளவில் தன்னை நிரூபித்து வருகிறார்.
இருமுறை சாதனை முறியடிப்பு
இந்தியாவின் மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரச்சிதா மிஸ்டரி என்ற வீராங்கனையின் சாதனையை இரண்டு முறை முறியடித்து டூட்டி, ஒலிம்பிக்கில் இடம் பிடித்தார்.
பி.டி. உஷாவிற்கு பிறகு டூட்டி சந்த்
ஒலிம்பிக் 100 மீட்டர் ஒட்டத்தில் 1980ல் பங்கேற்ற பி.டி. உஷாவிற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து கடந்த 2016ல் டூட்டி சந்த் கலந்து கொண்டு இந்தியாவின் பெருமைக்கு காரணமானார்.
டூட்டி சந்த் நீக்கம்
இவ்வாறு தொடர்ந்து தன்னுடைய திறமைகளை டூட்டி சந்த் நிரூபித்தாலும், அவருக்கு வேதனை காலமும் இருந்தது. கடந்த 2014 காமென் வெல்த் போட்டிகளில் ஒரு பெண்ணாக அவர் கலந்துகொள்ள முடியாது என்று இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது.
டூட்டிக்கு ஆதரவாக தீர்ப்பு
இதை எதிர்த்து கோர்ட் படி ஏறினார் டூட்டி சந்த். அவருக்கு கோர்ட் ஆப் ஆர்பிடரேஷன் பார் ஸ்போர்ட்ஸ் சாதகமான தீர்ப்பை வழங்கியது. அவர் மீதான தடையும் விலக்கப்பட்டது.
பெருமையான தருணம் என மகிழ்ச்சி
இந்நிலையில் தற்போது சிறந்த சாதனையாளர்களுக்கான டைம் 100 பேர் நம்பிக்கை நட்சத்திரங்களின் பட்டியலில் டூட்டி சந்த் இடம்பிடித்துள்ளார். இந்த தருணம் மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி
மேலும் அவர் கூறுகையில், தன்னுடைய சாதனை மற்றும் சோதனை காலங்களில் தன்னுடன் இருந்த தன்னுடைய ஆதரவாளர்களுக்கும் தன்னுடைய ஆலோசகர் அச்சுயுதா சமந்தாவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பாராட்டு
இதனிடையே ஒடிசாவின் விளையாட்டுத்துறை அமைச்சர் துஷார் காந்தி பெஹரா, டூட்டி சந்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் பாராட்டு தெரிவித்துள்ளார்.