பாரிஸ் : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவருக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி இறுதியில் ஜெர்மனியுடன் தோல்வியை தழுவி தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 44 ஆண்டுகளாக இந்திய அணி ஒலிம்பிக் ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லாமல் பரிதாபமான நிலையில் இருக்கின்றது. தற்போது வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா வியாழன் அன்று ஸ்பெயினை எதிர்கொள்கிறது.
இம்முறை இந்திய ஹாக்கி அணி சாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெர்மனியுடன் போராடி மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தனது கடைசி ஹாக்கி தொடரில் களம் இறங்கியுள்ள முன்னாள் கேப்டனும், கோல் கீப்பருமான பி ஆர் ஸ்ரீஜேஸ் தோல்வியை கண்டு துவண்டு போகாமல் வெண்கல பதக்கத்திற்கு போராட வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.

கடைசி போட்டியில் நாளை விளையாடுகிறீர்கள் அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பிஆர் ஸ்ரீஜேஸ், இது நாட்டுக்காக பதக்கம் வெல்ல ஒரு வாய்ப்பாக கருதுகிறேன். தவிர தனிப்பட்ட முறையில் இது எனக்கான போட்டி கிடையாது. இது என் நாட்டுக்கான போட்டி.
19 வீரர்களும் எங்கள் அணி நிர்வாகிகளுமான போட்டியாக இது இருக்கும். நாட்டுக்காக பதக்கம் வெல்ல இது எங்களுக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு. இதைப் பற்றி மட்டும் தான் எங்களுடைய சிந்தனை இருக்க வேண்டுமே, தவிர அரையிறுதியில் நாம் எவ்வாறு தோற்றோம் என்பது குறித்து யோசிக்க கூடாது. அரை இறுதியில் எங்களுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அதை நாங்கள் கோலாக மாற்றாமல் தவற விட்டு விட்டோம். அதுமட்டுமல்லாமல் எங்களுடைய தற்காப்பு இன்று கொஞ்சம் தடுமாறியது. ஹர்மன்பிரீத்துக்கு எதிராக ஜெர்மனி வீரர்கள் திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார்கள். இன்று (நேற்று) ஜெர்மனி சாம்பியன் போல் விளையாடினார்கள்.
அவர்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தது. நாங்கள் எந்த முடிவைப் பெற வேண்டும் என்று நினைத்தமோ அது எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் கடினமான வீரர்கள். நாங்கள் நிச்சயம் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் மீண்டு எழுந்து சிறப்பாக விளையாடுவோம். என்னை பொருத்தவரை இன்றைய ஆட்டத்தில் எப்படி தோற்றோம் என்பது குறித்து விவாதிக்காமல் வெண்கல பதக்கத்திற்கான போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும்.
நாம் எந்த இடத்தில் தவறை செய்தோம். அதை எப்படி சரி செய்ய வேண்டும்? எதிரணி எப்படி விளையாடுவார்கள்? அவர்களை எப்படி நாம் தாக்குவது? என்பது குறித்து எல்லாம் நாம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் ஸ்பெயின் ஒரு எளிதான அணி கிடையாது. அவர்களும் கடுமையாக போராடுவார்கள். காலிறுதியில் அவர்கள் எவ்வாறு விளையாடினார்கள் என்பதை பார்த்தாலே நாங்கள் எவ்வாறு அதற்கு தயாராக வேண்டும் என்பது தெரியும் என்று ஸ்ரீஜேஸ் கூறியுள்ளார்.