"சந்தோசப்படுவதா..வருந்துவதா என்றே தெரியவில்லை".. வெண்கலம் வென்ற பிவி சிந்து.. உணர்ச்சிகரமான பேச்சு
டோக்கியோ: வெண்கலம் வென்றதற்காக சந்தோசப்படுவதா அல்லது இறுதி போட்டிக்கு செல்ல முடியாததால் வருத்தப்படுவதா என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் இரண்டு தனி பதக்கங்கள் வாங்கிய ஒரே வீராங்கனை மற்றும் இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
கடந்த ஒலிம்பிக்கில் ஒரு வெண்கலம், இந்த ஒலிம்பிக்கில் ஒரு வெண்கலம் என்று பிவி சிந்து மிக சிறப்பாக ஆடி உள்ளார். அதிலும் காலிறுதி ஆட்டம் வரை ஒரு செட் கூட தோற்காமல் ஆடியவர் செமி பைனலில் மட்டும் இரண்டு செட்டிலும் தோல்வி அடைந்தார்.

வெண்கலம்
இந்த நிலையில் நேற்று வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் பிவி சிந்து ஆடினார். இவர் சீனாவின் பிங்க்ஜியோவை எதிர்கொண்டார். 21-13, 21-15 என்ற புள்ளி கணக்கில் இதில் சீன வீராங்கனையை வீழ்த்தி பிவி சிந்து வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். இந்தியாவிற்காக இரண்டாவது பதக்கம் வாங்கி கொடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

உழைப்பு
இந்த போட்டிக்கு பின்பாக பேட்டி அளித்த பிவி சிந்து, நான் இந்த தொடருக்காக பல வருடங்கள் உழைத்தேன். என்னுடைய பல வருட உழைப்பிற்கு பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைய விதமான உணர்ச்சிகள் இப்போது எனக்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது.

சந்தோசம்
நான் வெண்கலம் வென்றதற்காக சந்தோசப்படுவதா அல்லது இறுதி போட்டிக்கு செல்ல முடியாததால் வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. ஆனால் நான் பெரிதாக உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக ஆட வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக இருந்தேன்.

மகிழ்ச்சி
நான் ஆடினேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இந்தியாவிற்காக பதக்கம் வெல்வது எனக்கு சந்தோசம் தருகிறது. இந்த நிமிடத்தை நான் கொண்டாட போகிறேன். என்னுடைய குடும்பம் எனக்கு உதவியாக இருந்தது, எனக்காக கடுமையாக உழைத்தது. நான் தற்போது உற்சாக மிகுதியில் மிதக்கிறேன். எல்லோருக்கும் நான் நன்றியோடு இருக்கிறேன், என்று பிவி சிந்து குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications