பெங்களூரு: ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஆணாதிக்கம் ஆட்டிப் படைக்கிறது. ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கி சமூகம் தத்தளிக்கிறது. ஊழல் அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி போட்டுள்ளது என்று கூறியுள்ளார், அரசியல் நெருக்கடி காரணமாக தனது டிஎஸ்பி பதவியை ராஜினாமா செய்து விட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த அனுபமா ஷெனாய்.
பெல்லாரி மாவட்டத்தில் அவர் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார். ஆனால் அரசியல் நெருக்கடி அவரை செயல்பட விடாமல் தடுத்ததால் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். அவருக்கு அரசியல் நெருக்கடி கொடுத்தது அமைச்சர் பிடி பரமேஷ்வர் நாயக் என்பது குற்றச்சாட்டு.
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள கர்நாடக மகளிர் ஆணைய அலுவலகத்திற்கு வருகை தந்தார் அனுபமா. அங்கு ஆணையத் தலைவர் மஞ்சுளா மானசாவைச் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அனுபமா ஷெனாய் பேசுகையில், இது ஆணாதிக்க சமுதாயம். இங்கு பெண் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பும் இல்லை, சுதந்திரமும் இல்லை.
பெண் அதிகாரிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க என்ன வழி என்பது குறித்து கர்நாடக மகளிர் ஆணையத்துடன் ஆலோசிக்கவே இங்கு வந்தேன். அவர்களுடன் பேசியுள்ளேன்.
ஒட்டுமொத்த சமுதாயமும், ஆணாதிக்கத்தின் பிடியில் உள்ளது. இங்கு ஆண்களின் பேச்சுதான் எடுபடுகிறது. அவர்கள் சொல்வதைத்தான் பெண்கள் செய்ய வேண்டும். நான் இந்த ஆணாதிக்க சமுதாயத்திற்கும், ஊழல் அரசியலுக்கும் பலிகடவாக்கப்பட்டவள் என்றார் அனுபமா ஷெனாய்.
மேலும் அவர் கூறுகையில், இந்த அமைப்பின் மூலமாக (மகளிர் ஆணையம்) சில நல்ல வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன். பெண் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அவர்களின் குறைகளைத் தீர்க்க ஆணையம் ஏதாவது செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.
நான் இப்போது மிகுந்த மன அமைதியுடன் இருக்கிறேன். பணியில் இருந்தபோது அது எனக்குக் கிடைக்கவில்லை. இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன். வேலை எனக்கு மன நிம்மதியைத் தரவில்லை என்றார் அவர்.
கர்நாடக மகளிர் ஆணையத் தலைவி மஞ்சுளா மானசா கூறுகையில், முதல் கட்ட விசாரணை நடந்தது. அடுத்த கட்ட விசாரணை ஜூலை 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக பெல்லாரி மாவட்ட எஸ்.பி. சேத்தன் தனக்கு மன உளைச்சல் ஏற்படும் வகையில் நெருக்கடி தருகிறார். அரசியல் நெருக்கடிகளுக்குப் பணிந்து போகுமாறு தொந்தரவு செய்கிறார் என்று அனுபமா புகார் கூறியிருந்ததார். அதுதொடர்பாகவும் ஆணையம் விசாரணை நடத்தியது.