ஐபிஎல் 2020 என்னோட கடைசி போட்டியா... யார் சொன்னது... ஹர்பஜன் சிங் கேள்வி
டெல்லி : தன்னுடைய 40வது பிறந்தநாளை இந்திய அணியின் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் சமீபத்தில் கொண்டாடினார். சர்வதேச போட்டிகளில் அவர் பங்கேற்காத நிலையில், அவரது ஓய்வு குறித்து பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர்.
Recommended Video
இந்நிலையில் பிடிஐயின் கலந்துரையாடலில் பங்கேற்ற ஹர்பஜன் சிங் 2020 ஐபிஎல் தன்னுடைய இறுதி தொடராக இருக்குமா என்பது தன்னுடைய பிட்னஸ் சம்பந்தப்பட்டது என்று கூறியுள்ளார்.
நம்முடைய திறமையை வயது தீர்மானிக்காகது அதற்கு பிட்னசே முக்கியம் என்று தெரிவித்துள்ள ஹர்பஜன், எந்த இளம் வீரருக்கும் தன்னுடைய பிட்னஸ் சளைத்ததல்ல என்றும் தேவைப்படும் பட்சத்தில் சோதித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

711 சர்வதேச விக்கெட்டுகள்
இந்திய அணியின் ஸ்பின்னராக உள்ள ஹர்பஜன் சிங், கடந்த 22 ஆண்டுகளாக தன்னுடைய சிறப்பான பௌலிங் மூலம் இந்திய அணிக்கு பெருமை சேர்த்து வருபவர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 711 விக்கெட்டுகளை தன்னுடைய கைவசம் வைத்திருப்பவர். தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவரும் இவர் அதிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

பிட்னஸ் சிறப்பாக உள்ளது
டி20 போட்டிகளில் விளையாடி 235 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹர்பஜன் சிங், 103 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் பிடிஐயின் கலந்துரையாடலில் பங்கேற்ற ஹர்பஜன் சிங், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 40 வயதான ஹர்பஜன், போட்டிகளில் பங்கேற்க வயது தடையல்ல என்றும், தற்போதும் இளம் வீரர்களுக்கு சவால் விடும்வகையில் தன்னுடைய பிட்னஸ் உள்ளதாகவும் வேண்டுமானால் சோதித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறந்த பௌலிங்கை அளிப்பேன்
இந்தியாவிற்காக தான் 800 நாட்கள் விளையாடியுள்ளதாகவும் தான் மிகச்சிறந்த வெற்றியாளனாக வலம் வந்ததாகவும் பெருமை தெரிவித்த ஹர்பஜன், தனக்கு யாருடைய கருணையும் தேவையில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போதும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பான பௌலிங்கை அளிக்க தான் பிட்னசுடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்து கூற விரும்பவில்லை
இதுவரை நடைபெற்ற 12 ஐபிஎல் போட்டிகளிலும் ஹர்பஜன் சிங் விளையாடியுள்ளார். இந்நிலையில், இந்த ஐபிஎல் 2020 அவரது இறுதி தொடராக இருக்குமா என்ற கேள்விக்கு அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றும் அது தன்னுடைய பிட்னஸ் சம்பந்தப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த கொரோனா சமயத்தில் யோகா உள்ளிட்டவற்றை செய்து தன்னுடைய உடலை மிகவும் பிட்டாக மாற்றியுள்ளதாகவும் கடந்த 2013 தொடரில் 24 விக்கெட்டுகளை வீழ்த்திய அளவிற்கு தன்னுடைய பிட்னஸ் தற்போது மேம்பட்டுள்ளதாகவும் கூறினார்.


Click it and Unblock the Notifications