டெல்லி: ரியோ ஒலிம்பிக்கில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தின் போது இந்திய அதிகாரிகள் குடிப்பதற்கு தண்ணீர் கூட தரவில்லை என்று இந்திய மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ஒ.பி. ஜெய்ஷா அதிர்ச்சிகர தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் 42 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டியில் இந்திய வீராங்கனை ஓ.பி ஜெய்ஷா கலந்துகொண்டார். 57 வீராங்கனை கலந்து கொண்டதில் 89-வது இடம்பிடித்தார். 157 பேர் கலந்துகொண்ட இப்போட்டியில் அவர் 89வது இடத்தைப் பிடித்தார். இந்நிலையில் தனக்கு இந்திய அதிகாரிகளிடமிருந்து எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தி சேனல்களுக்கு பேட்டி அளித்து உள்ளார். அதில்"நான் போட்டியில் கலந்துகொண்டு ஓடும் போது, மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவரவர் நாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக நாட்டுக் கொடியுடன் உற்சாகத்துடன் அவர்களை ஊக்குவித்துக்கொண்டிருந்தனர். ஆனால் நம் நாட்டின் தேசியக்கொடியுடன் என்னை ஊக்கப்படுத்த ஒருவர்கூட அங்கு இல்லை.
போட்டியில் கலந்து கொண்ட பிற வீராங்கனைகளுக்கு அவர்களது நாட்டு அதிகாரிகள் ஒவ்வொரு 2.5 கிலோ மீட்டர் தொலைவில் மேஜை அமைத்து அவர்களுக்கு தண்ணீர், பிஸ்கட், குளுக்கோஸ் உள்ளிட்ட உணவுகளை வழங்கினர். ஆனால் இந்தியாவிற்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் இந்தியாவின் தேசிய கொடியும் இந்தியாவின் பெயரும் மட்டுமே இருந்தது.
அதிகாரப்பூர்வ ஒலிம்பிக்ஸ் கவுண்டர்கள் 8 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அங்குதான் ஜெய்ஷாவிற்கு தண்ணீர் கிடைத்துள்ளது. போட்டி முடிவடைந்ததும் என்னுடைய உடலில் பல்ஸ் இல்லை என்பதை உணர முடிந்தது. மேலும் போட்டியின் எல்லையை எட்டும்போது அவர் மயங்கி விழுந்துவிட்டார். மயங்கி விழுந்த அவரை காப்பாற்ற கூட இந்திய ஒலிம்பிக் அதிகாரிகள் யாரும் அருகில் இல்லை. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஏற்கெனவே விமான பயணத்தின்போது இந்திய வீராங்கனை டூட்டி சந்த் வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூறியிருந்தார். மேலும் சில வீரர் வீராங்கனைகள் இந்திய ஒலிம்பிக் அதிகாரிகளின் மோசமான நடவடிக்கைகள் குறித்து குறை கூறியுள்ளனர். இந்திய ஒலிம்பிக் கமிட்டி அதிகாரிகளின் இந்த செயல் இந்திய ஒலிம்பிக் வீரர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.