பெக்கு: செஸ் உலகக்கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தின் இரண்டாவது சுற்றில் மேக்னஸ் கார்ல்சன் டிராவுக்காக ஆடுவார் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை என்று தமிழக வீரர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.
செஸ் உலகக்கோப்பைத் தொடர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலமாக சர்வதேச கவனத்தை தன்பக்கம் திருப்பியுள்ளார் பிரக்ஞானந்தா. 20 ஆண்டுகளுக்கு பின் செஸ் உலகக்கோப்பையை வெல்லும் இந்திய வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் - பிரக்ஞானந்தா இடையிலான இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது. வெள்ளை காய்களுடன் ஆடிய கார்ல்சனுக்கு அட்டாக் செய்வதற்கான சாதகங்கள் அமைந்தும், தொடக்கம் முதலே டிராவுக்காக ஆடினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போட்டி, இறுதியாக டிராவில் முடிவடைந்தது.
இந்தப் போட்டிக்கு பின் பிரக்ஞானந்தா பேசுகையில், இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்றில் இவ்வளவு விரைவாக டிராவுக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரின் நகர்வுகள் டிராவுக்கானதாக இருந்ததை விரைவாகவே அறிந்துகொண்டேன். எனக்கும் அது சரியென்று தோன்றியது. ஏனென்றால் தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடி வருகிறேன். இருந்தாலும் நாளை ஒட்டுமொத்தமாக வெற்றிக்காக விளையாட போகிறேன்.
கார்ல்சனும் விளையாடும் போது நல்ல எனர்ஜியுடன் காணப்படவில்லை. அதற்காக உடல்நிலை சரியில்லை என்று நினைக்கவில்லை. நாளை மீண்டும் புத்துணர்ச்சியுடன் களமிறங்க வேண்டும். நிச்சயம் டை பிரேக்கர் சுற்றுகள் சிறிய ஆட்டமாக இருந்தாலும், அதிகப்படியான ஆட்டங்கள் நடக்கும் என்று நினைக்கிறேன். அதனால் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.