பெக்கு: செஸ் உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின் ஃபுட் பாய்சனிங் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் புலம்பியுள்ளார்.
செஸ் உலகக்கோப்பை தொடர் இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 18 வயதேயான பிரக்ஞானந்தா, விஸ்வநாதன் ஆனந்திற்கு பின் செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கால்பந்து இறுதிப்போட்டியின் போது எப்படி இந்திய ரசிகர்கள் கால்பந்தை பார்க்க தொடங்கினார்களோ, அதேபோல் தற்போது செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் பிரக்ஞானந்தா - மேக்னஸ் கார்ல்சனின் ஆட்டம் வேறு உச்சத்தில் இருக்கிறது. ஒவ்வொரு நகர்வும், ஒவ்வொரு விநாடியும் பரபரப்பை அதிகரித்து கொண்டே செல்கிறது. இறுதிப்போட்டியின் போது நிதானம் காத்த பிரக்ஞானந்தா கார்ல்சனின் நகர்வுகளுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் பிரக்ஞானந்தாவின் அட்டாக், கார்ல்சனை திக்குமுக்காட செய்தது.
இருப்பினும் சுதாரித்து கொண்ட கார்ல்சன் ஆட்டத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இருவருமே ராணியை அடுத்தடுத்த நகர்வுகளில் இழந்ததும், ஆட்டத்தின் பரபரப்பு அடுத்தக் கட்டத்திற்கு சென்றது. ஆனால் இறுதியாக பிரக்ஞானந்தா - மேக்னஸ் கார்ல்சன் இடையிலான செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் முதல் சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. பொதுவாக எந்த வீரருடனும் மேக்னஸ் கார்ல்சன் டிரா என்ற பேச்சுவார்த்தைக்கே வர மாட்டார்.

ஆனால் நேற்றைய ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சன் டிராவுக்கு ஒத்துக் கொண்டார். இருப்பினும் கார்ல்சனின் முகத்தில் எந்த பரபரப்பும் எமோஷனும் வெளிப்படவில்லை. இந்த இறுதிப்போட்டியின் முதல் சுற்றுக்கு பின் மேக்னஸ் கார்ல்சன் பேசுகையில், நேற்று முன்தினம் பிரக்ஞானந்தா டை பிரேக்கர் சுற்றுகள் ஆடியதால், எந்தவொரு ஓய்வும் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் அரையிறுதிக்கு பின் எனக்கு ஒருநாள் நல்ல ஓய்வு கிடைத்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக மோசமான அனுபவமாக இருந்தது.
அபசோவ் உடனான போட்டிக்கு பின் எனக்கு ஃபுட் பாய்சனிங் ஏற்பட்டது. கடந்த இரு நாட்களாக என்னால் எந்த உணவையும் சாப்பிட முடியவில்லை. எனது உடலில் எந்த எனர்ஜியும் இல்லாததன் காரணமாகவே நான் பரபரப்பாக இருந்தது உடலிலோ, முகத்திலோ தெரியவில்லை என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். உலகக்கோப்பை செஸ் தொடர் இறுதிப்போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டம் இன்று மாலை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.