மும்பை: ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கார் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலமாக ஒரே ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் மனு பாக்கர் படைத்தார்.
இதன் காரணமாக இந்தியாவின் முன்னணி விளையாட்டு வீரர்களில் ஒருவராக மனு பாக்கர் மாறியுள்ளார். விளம்பர நிறுவனங்கள் மனு பாக்கரை கோடிகளை கொட்டி ஒப்பந்தம் செய்து வருகின்றனர். ஒலிம்பிக் தொடருக்கு பின் மனு பாக்கரின் பிராண்ட் வேல்யூ 330 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், முதல் ரூ.20 லட்சம் வரை மட்டுமே மனு பாக்கருக்கு விளம்பர நிறுவனங்கள் கொடுக்க முன் வந்தன.

தற்போது ரூ.2 கோடி வரை விளம்பர நிறுவனங்கள் ஊதியம் கொடுக்க தயாராக உள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் இந்தியாவின் பல்வேறு நட்சத்திரங்களையும் மனு பாக்கர் சந்தித்து வருகிறார். அதேபோல் பல்வேறு மாநிலங்களுக்கு பயணிக்கும் மனு பாக்கர் சிறுவர்கள், இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தனது பயணம் குறித்து பேசி வருகிறார்.
இந்த நிலையில் மனு பாக்கரிடம் ஒருநாள் முழுக்க ஒரு விளையாட்டு வீரருடன் நேரம் செலவிட வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மனு பாக்கர் பதில் அளிக்கையில், இந்த கேள்விக்கு எனக்கு பிடித்த விளையாட்டு வீரர்களை சொல்லலாம் என்று நினைக்கிறேன். முதலில் ஜமைக்கா விளையாட்டு வீரர் உசைன் போல்ட் தான். அவர் தொடர்புடைய ஏராளமான புத்தகங்களையும் படித்திருக்கிறேன்.
அவர் கடந்த வந்த பயணமும், வாழ்க்கையையும் நன்கு அறிவேன். அவரின் எந்த நேர்காணலையும் விட்டுவைத்ததில்லை. அத்தனையையும் பார்த்துவிடுவேன். இந்திய விளையாட்டு வீரர்கள் என்றால் நிச்சயம் முதல் பெயர் சச்சின் டெண்டுல்கர் தான். அதன்பின் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோருடன் நேரம் செலவிட விரும்புவேன். இவர்கள் மூவரில் ஒருவருடன் ஒரு மணி நேரம் செலவிட்டால் கூட வாழ்க்கையில் மறக்கவே முடியாது.
அதேபோல் ஒரு விளையாட்டு வீராங்கனையாக இந்தியாவுக்கு இன்னும் பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். ஒலிம்பிக் மட்டுமல்லாமல் மற்ற போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும். அதேபோல் வருங்கால தலைமுறைக்கு எனது அனுபவத்தையும் பயிற்சிகளையும் கூறுவதற்கு தயாராக இருப்பேன். ஏனென்றால் புதிதாக பயிற்சியை தொடங்குவோருக்கு எனது அனுபவங்கள் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.