குவாங்ஷு: ஆசிய விளையாட்டு கபடிஆட்டத்தின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் 6வது முறையாக தங்கம் வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு பிரகாசமாகியுள்ளது.கபடிப் போட்டியில் தொடர்ந்து 5 முறை தங்கம் வென்று சாதனையுடன் வலம் வருகிறது இந்தியா. இந்த நிலையில் தற்போது 6வது முறையாக தங்கம் வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு கை கூடியுள்ளது.நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் ஜப்பானை படு எளிதாக வெற்றி கண்டது இந்தியா. இப்போட்டியில், 52-17 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.இந்திய வீரர்களின் கிடுக்கிப் பிடிக்கு முன்பு ஜப்பானியர்கள் நிற்கக் கூட முடியவில்லை. இறுதிப் போட்டியில் நாளை ஈரான் அணியை சந்திக்கிறது இந்தியா. இப்போட்டியில் வெற்றி பெற்றால் அது இந்தியா தொடர்ச்சியாக வெல்லும் 6வது தங்கமாக அமையும்.கடந்த 1990ம் ஆண்டு கபடிப் போட்டி ஆசிய விளையாட்டுப் போட்டியில் அறிமுகமானது. அன்று முதல் இதுவரை இந்தியாவே தொடர்ந்து தங்கத்தைத வென்று வருவது குறிப்பிடத்தக்கது.