பாலெம்பங் : ஆசிய விளையாட்டு போட்டியில், இந்தியாவுக்கு இதுவரை மூன்று பதக்கங்கள் மட்டுமே கிடைத்து இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதலில் ட்ராப் பிரிவில் லக்ஷை ஷெரான் வெள்ளி வென்று இந்தியாவின் பதக்க வேட்டையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி உள்ளார்.
இந்தோனேசியாவின் பாலெம்பங் நகரில் நடந்த ட்ராப் துப்பாக்கி சுடுதல் போட்டியில், லக்ஷை ஷெரான் 50க்கு 43 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார்.
சீன தைபெய்-ஐ சேர்ந்த குன்பி யாங் 48 புள்ளிகள் பெற்று தங்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்தியரான மானவ்ஜித் சிங் சாந்து நான்காவதாக வந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார்.
பத்தொன்பது வயது லக்ஷை ஷெரான் பெற்ற வெற்றி பதக்க வேட்டையில் பின்தங்கிய இந்தியாவை சற்று நிமிர வைத்துள்ளது.
இந்தியா இதுவரை, ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று இருந்த நிலையில், தற்போது மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இதில் குறிப்பாக மூன்று பதக்கங்கள் துப்பாக்கி சுடுதலில் தான் கிடைத்துள்ளது. மற்றொன்று, மல்யுத்தத்தில் கிடைத்தது.