நைரோபி: உலக தடகள U20 சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய கலப்பு 4x400 மீ ரிலே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
உலக தடகள U20 சாம்பியன்ஷிப் தொடர் கென்யாவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நைரோபியில் உள்ள கசரனி ஸ்டேடியத்தில் நடைபெற்ற கலப்பு 4x400 மீ ரிலே first heat பிரிவில் இந்திய அணி வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கலப்பு 4x400 மீ ரிலே first heat பிரிவு இந்திய அணியில், அப்துல் ரசாக், பிரியா மோகன், சம்மி மற்றும் கபில் ஆகியோர் பங்கேற்றனர். இதில், இந்திய அணி 3 நிமிட 23.36 வினாடிகளில் கலந்த 4x400 மீ ரிலே முதல் ஹீட்டை வென்று அசத்தியுள்ளது.
இதில், ரசாக் 48.18s, பிரியா 53.70s, சம்மி 54.63s மற்றும் கபில் 46.85s நேரம் எடுத்துக் கொண்டு அணியை வெற்றிப் பெற வைத்தனர். போலந்து மற்றும் ஜமைக்கா எனும் இரு வலிமையான அணிகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றிப் பெற்றது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. இரண்டு ஹீட்டுகளிலிருந்து முதல் மூன்று பேரும், மற்றும் இரண்டு சிறந்த ஃபினிஷர்களும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். 3: 21.66 வினாடிகளில் இலக்கை எட்டி நைஜீரியா முதலிடம் பிடித்தது.

அதுமட்டுமின்றி, செக் குடியரசு (3: 24.15s), ஜமைக்கா (3: 24.65s), போலந்து (3: 24.69s), இலங்கை (3: 26.62s), இத்தாலி (3: 28.00s), மற்றும் தென்னாப்பிரிக்கா (3: 30.43s) ஆகிய மற்ற அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.
பெண்கள் 400 மீட்டரில் பிரியா (53.79 s) தனது ஹீட்டில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். சம்மி ஐந்தாவது இடத்தைப் பிடித்ததால் இறுதிப் போட்டியில் நுழையத் தவறினார். 400 மீ இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி (IST) முதல் நடைபெற உள்ளது.

இதற்கிடையில், ஆண்களுக்கான ஷாட் புட் போட்டியில், அமன்தீப் சிங் தாலிவால் 17.92 மீ தூரத்துடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப் போட்டி வியாழக்கிழமை மாலை 5.20 மணி (IST) முதல் நடைபெறும்.
முதல் நாளில் hammer throw போட்டியில் இந்திய வீரர் விபின் குமார், 63.17m தூரம் வீசினார். இதனால், மொத்தம் பங்கேற்ற 24 போட்டியாளர்களில் 20வது இடத்தையே அவரால் பிடிக்க முடிந்தது. இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதிப் பெற வேண்டுமெனில், 74.00 மீ தூரம் வீசியாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.