ஹாங்க்சோ : 2௦23ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்க்சோ நகரில் துவங்கியது.
இன்று இதன் துவக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த ஆண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக துவங்கி வைத்தார்.

துவக்க விழாவில் பங்கேற்கும் ஆசிய நாடுகள் வரிசையாக அணிவகுத்து சென்றன. இந்தியா சார்பில் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் லோவ்லினா போர்கோஹைன் தேசியக் கொடியை ஏந்தி அணிவகுத்துச் சென்றனர்.
இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் குர்தா அணிந்தும் மற்றும் பெண்கள் குத்துச்சண்டை 75 கிலோ பிரிவில் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லோவ்லினா போர்கோஹைன் காக்கி நிற புடவை அணிந்தும் அணிவகுத்து வந்தனர். அவர்கள் பின்னே மற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் அணிவகுத்துச் சென்றனர்.
சீனா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பிற ஆசிய நாடுகளின் வீரர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
இந்த துவக்க விழா சீனாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. முதலில் சீனாவின் தேசியக் கொடி ஏற்றப்பட்ட பின் இந்த விழா துவங்கியது.

இந்த விழாவில் சீனாவின் சார்பில் மூன்று ரோபோட்கள் பங்கேற்றன. அவை பாரம்பரியம் மற்றும் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியை குறிக்கும் வகையில் இடம் பெற்றன. அந்த மூன்று ரோபோட்களின் பெயர்கள் - சென்சென், காங்காங் மற்றும் லியான்லியான்.
இந்த விழாவின் மையக்கருவாக நீர், மலை மற்றும் நிலவு இடம் பெற்றுள்ளது. விழா மேடையை சுற்றி உள்ள அலங்காரம் அனைத்தும் இந்த மூன்றை குறிப்பிடும் வகையிலேயே இருந்தன.
பொதுவாக இது போன்ற பெரிய துவக்க விழாக்களில் பட்டாசு மற்றும் வான வேடிக்கை இடம்பெறும். ஆனால், இந்த முறை சீனா அதை செய்யவில்லை. விழா நடைபெறும் இடத்தில் அதற்கான வசதி இல்லை என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு 45 ஆசிய நாடுகளில் இருந்து 12,000 வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 481 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.