கவுகாத்தி: தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். 53 தங்கம் உள்பட 79 பதக்கங்களை பெற்று தொடந்து பதக்கப் பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளது இந்தியா.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவின் கவுகாத்தி மற்றும் சில்லாங்கில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி, அசாம் முதலமைச்சர் தருண் கோகாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 14 தங்கம், 5 வெள்ளி என மொத்தம் 19 பதக்கங்களை பெற்றது. 2-வது நாளில் 16 தங்கம், 7 வெள்ளி என 26 பதக்கங்களை பெற்றது. 3-வது நாளிலும் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்தது.
தமிழக ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, பேட்மிண்டனில் பி.வி. சிந்து, பளுதூக்குதலில் கவிதா ஆகியோர் தங்கம் வென்றனர். இது தவிர குழு சைக்கிள் போட்டி, வில்வித்தை ஆகியவற்றில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவிலும் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்தது.
பதக்க பட்டியலில் இந்தியா மொத்தம் 53 தங்கம் உள்பட 79 பதக்கங்களை பெற்று முதல் இடத்தில் உள்ளது. 11 தங்கம் உள்பட 61 பதக்கங்களுடன் இலங்கை 2-வது இடத்திலும், 4 தங்கம் உள்பட 29 பதக்கங்களுடன் பாகிஸ்தான் 3-வது இடத்திலும் உள்ளன.