ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளி வென்றார். இந்தியாவிற்கு இன்று மூன்றாவது பதக்கம் கிடைத்துள்ளது. மூன்றுமே துப்பாக்கி சுடுதலில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று ஆண்கள் 50 மீட்டர் 3 பொசிசன் துப்பாக்கி சுடுதல் பிரிவில், இறுதிப் போட்டி நடைபெற்றது. அதில் இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புட் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றார். முதலில் அசத்தலாக ஆரம்பித்து தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். எனினும், இடையில் புள்ளிகள் குறைந்தது. கடைசி இரண்டு ஷாட்டில் மீண்ட அவர் வெள்ளியை தட்டிச் சென்றார்.
[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]
சீனாவின் ஹுய் ஜிசெங் முதல் இடம் பிடித்தார். முதலில் பின்தங்கி இருந்த இவர் கடைசி வாய்ப்புகளில் அதிக புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். ஹுய் ஜிசெங் 453.3 புள்ளிகளும், இந்தியாவின் சஞ்சீவ் ராஜ்புட் 452.7 புள்ளிகளும் பெற்றனர்.
இந்த வெள்ளியோடு சேர்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. இதில் ஆறு பதக்கங்கள் துப்பாக்கி சுடுதலில் கிடைத்துள்ளது. மூன்று தங்கம், மூன்று வெள்ளி, இரண்டு வெண்கலம் வென்றுள்ளது இந்தியா.