திருவனந்தபுரம்: 11வது தற்காசிய கால்பந்து சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றுள்ளது., திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில், நடப்பு சாம்பியன் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இப்பட்டத்தை இந்தியா வென்றது.
11-ஆவது தெற்காசிய பெடரேஷன் கோப்பைக்கான கால்பந்து போட்டி திருவனந்தபுரத்தில் நடந்து வந்தது. 7 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி, நடப்பு சாம்பியனான ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மாலை மோதின.

விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்காததால் 0-0 என்ற பரபரப்பு நிலை நீடித்து.
இருப்பினும், ஆட்டத்தின் 71-ஆவது நிமிடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் சுபெயிர் அம்ரி முதல் கோலை அடித்து இந்திய ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டுவந்தார். பிறகு சுதாரித்துக் கொண்ட இந்திய அணி அடுத்த நிமிடமே ஒரு கோலை அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்திய வீரர் ஜேஜே லால்பெக்குலா இந்த கோலை அடித்தார்.
ஆட்ட நேர முடிவிலும் இரு அணிகளும் சமமாக இருந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் இந்திய வீரர் சுனில் சேத்ரி கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இந்திய அணி இந்த போட்டியில் 7ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.