டாக்கா: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே எந்த போட்டி நடந்தாலும் அது பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. ஆசியக் கோப்பை ஹாக்கியில் நாளை நடக்கும் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
2018ல் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அளிக்கும் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டிகள் வங்கதேசத்தில் நடந்து வருகின்றன.

இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், வங்கதேசம் அணிகள் உள்ளன. பி பிரிவில் மலேசியா, தென்கொரியா, ஓமன், சீனா அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஏ பிரிவில் நடந்த தனது முதல் ஆட்டத்தில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வென்றது. பாகிஸ்தான் 7-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை வென்றது.
நேற்றிரவு நடந்த இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை சுலபமாக வென்றது. ஜப்பான் - பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவானது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், நாளை நடக்கும் ஆட்டத்தில் மோத உள்ளன. மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான், வங்கதேசத்தை சந்திக்கிறது.
பி பிரிவில் மலேசியா மற்றும் தென் கொரியா தலா ஒரு வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.