இந்தியாவின் முதல் எப் 1 ரேஸ்- செபாஸ்டியன் வெட்டல் முதலிடம்- 17வது இடத்தில் நரேன்

ஜேகே ஸ்போர்ட்ஸ் அகாடமி டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் மிகப் பெரிய எப் 1 பந்தய மைதானத்தை உருவாக்கியுள்ளது. புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் எனப்படும் இந்த மைதானத்தை சமீபத்தில் இந்தியாவின் முதல் எப் 1 வீரர் நரேன் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.
இந்த மைதானத்தில் இன்று பிற்பகலில் இந்தியாவின் முதல் எப் 1 கார்ப் பந்தயம் நடந்தது. ரசிகர்களின் பெரும் உற்சாகத்துக்கு மத்தியில் இப்போட்டி தொடங்கியது. இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கொடியசைத்துப் பந்தயத்தைத் தொடங்கி வைத்தார்.
மொத்தம் 24 சர்வதேச வீரர்கள் இதில் கலந்து கொண்டு முதலிடத்திற்காக புயலென சீறிப் பாய்ந்தனர். இவர்களில் நரேன் கார்த்திகேயன் மட்டுமே ஒரே ஒரு இந்திய வீரர் ஆவார்.
மொத்தம் 16 வளைவுகளுடன் கூடிய, 5.14 கிலோமீட்டர் தொலைவிலான புத் இன்டர்நேஷனல் பந்தய மைதானத்தில் மொத்தம் 60 Lapகளுடன் கூடியதாக போட்டி நடந்தது.
இதில் ஆரம்பத்திலிருந்தே செபாஸ்டியன் வெட்டல் தான் முன்னணியில் இருந்தார். புயலென சீறிப் பாய்ந்த வெட்டல், இறுதியில் முதலிடத்தை தக்க வைத்து வெற்றி பெற்றார்.
2வது இடத்தை பென்சன் பட்டனும், 3வது இடத்தை அலோன்சாவும் பெற்றனர். வெப்பர் 4வது இடம் பிடித்தார். மைக்கேல் ஷூமேக்கர் 5வது இடத்தைப் பிடித்தார்.
நரேன் கார்த்திகேயனுக்கு 17வது இடம்
இந்திய வீரரான நரேன் கார்த்திகேயன், இந்தப் போட்டியில் 17வது இடத்தைப் பிடித்தார். இதுவே பெரிய விஷயம்தான். காரணம் நேற்று நடந்த தகுதிப் போட்டியி்ல் நரேன் 22வது இடத்தைப் பிடித்திருந்தார். இந்த நிலையில் இன்று நடந்த இறுதிச் சுற்றில் அவர் 17வது இடத்தைப் பிடித்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
போர்ஸ் இந்திய வீரருக்கு 9வது இடம்
இந்திய அணியான போர்ஸ் இந்தியாவின் வீரர் சுதில் 9வது இடத்தைப் பிடித்து போர்ஸ் இந்தியாவுக்குப் பெருமையைத் தேடித் தந்தார்.
இன்றைய போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த வீரர்கள் 5 பேர் கலந்து கொண்டனர். இந்த நாட்டிலிருந்துதான் அதிக அளவிலான வீரர்கள் ரேஸில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசில், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து தலா 2 பேரும், இந்தியா, ஜப்பான், ஸ்விஸ், வெனிசூலா, பெல்ஜியம், ரஷ்யா, ஸ்காட்லாந்து, மெக்சிகோ, பின்லாந்திலிருந்து தலா ஒருவரும் பங்கேற்றனர். 12 அணிகளைச் சேர்ந்த 24 பேர் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.
இந்திய வீரர் நரேன் கார்த்திகேயன் தகுதிப் போட்டியின்போது மைக்கேல் ஷூமேக்கரின் காரை மறித்து முந்த முயன்றதால் அவருக்கு பெனால்டி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் 5 இடங்கள் பின்தங்கி 23வது இடத்திலிருந்து போட்டியைத் தொடங்கினார்.
வெட்டலுக்கு 13வது வெற்றி
இந்த ஆண்டுக்கான எப் 1 போட்டிச் சுற்றில், கடந்த 6 பந்தயங்களாக ஸ்பெயினின் செபாஸ்டியன் வெட்டல்தான் முதலிடத்தைப் பிடித்தார். தற்போது இந்தியாவில் நடந்த இந்தியாவின் முதலாவது எப் 1 பந்தயத்தையும் அவர் வென்றுளள்ளார்.
மேலும், மொத்தம் 13 எப் 1 போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்து மைக்கேல் ஷூமேக்கர் ஏற்கனவே வைத்திருந்த சாதனையை சமன் செய்துள்ளார் வெட்டல் என்பது குறிப்பிடத்தக்து.
Story first published: Wednesday, May 30, 2012, 12:35 [IST]
Other articles published on May 30, 2012


Click it and Unblock the Notifications