டெல்லி: ஒலிம்பிக்கிற்காக, பிரிட்டன் செலவிடுவதில் 3ல் ஒரு பங்குதான் இந்தியா செலவிடுவதாக புள்ளி விவரங்கள் கூறும் நிலையில், பதக்கம் வரவில்லை என வருத்தப்பட்டு என்ன பலன் என்பதுதான் இந்திய ரசிகர்கள் முன்பு எஞ்சி நிற்கும் கேள்வி.
நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் பிரிட்டன் 67 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. அந்த நாட்டில், 15 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எண்ணிக்கை 18 மில்லியனாக உள்ளது. ஆனால், இந்தியாவிலோ, 400 மில்லியன் இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெற்ற பதக்கங்கள் எண்ணிக்கை வெறும் 2.

இதற்கு காரணம், பிரிட்டனைவிட நாம், சுமார் 3 மடங்கு அளவுக்கு குறைவாகவே ஒலிம்பிக் ஆயத்தங்களுக்கு செலவிடுகிறோம் என்பதுதான். 2013-17 ஆண்டுக்கு இடைப்பட்ட நான்காண்டு காலத்தில், ஒலிம்பிக் ஆயத்தங்களுக்காக, பிரிட்டன் 350 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. இக்காலகட்டத்தில், இந்தியா, பிரிட்டன் செலவிட்டதில் 3ல் ஒரு பங்குதான் செலவிட்டுள்ளது.
அதாவது இந்தியா கடந்த 4 ஆண்டுகளில் ரூ.750 கோடியை விளையாட்டு கட்டமைப்புக்காக செலவிட்டுள்ளது. அதேநேரம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு பெடரேஷன் எண்ணிக்கை 57லிருந்து 49-ஆக குறைந்துள்ளது.