மெல்போர்ன்: இதுவரை வெல்ல முடியாத டெஸ்ட் அணியாக வலம் வந்த தென் ஆப்பிரிக்காவை, சாதனைகளுடன் வெளுத்து வாங்கியுள்ளது இந்தியா.
ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் ஒரே வெற்றியில் பல உற்சாகக் கொண்டாட்டங்களுக்கு வழி வகுத்துள்ளனர் இந்திய வீரர்கள்.
இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் இதற்கு முன்பு 1992, 1999 மற்றும் 2011 ஆகிய உலகக் கோப்பைப் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 3 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்காதான் வென்றிருந்தது.

அந்த வரலாற்றை இன்று திருத்தி எழுதி விட்டது இந்தியா. முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை உலகக் கோப்பைப் போட்டியில் இ்ந்தியா வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் அணிகள் அனைத்தையும் வென்றுள்ளது இந்தியா.
கடந்த 1992 போட்டியில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீ்ழ்த்தியிருந்தது. அந்தப் போட்டியில் இந்தியா 180 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா 181 ரன்கள் எடுத்து வென்றது.
1999 போட்டியில் இந்தியா 253 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா 254 ரன்கள் எடுத்து வென்றது. இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா.

2011 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 300 ரன்கள் எடுத்தது இந்தியா 296 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
இன்றைய போட்டியில் இந்தியா 307 ரன்கள் குவித்து ரன் குவிப்பில் புதிய சாதனை படைத்தது. அதேபோல வெற்றி வித்தியாசத்திலும் 130 ரன்கள் வித்தியாசம் என்ற பெரிய சாதனையைப் படைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியால் 200 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 40.12 ஓவர்களிலேயே சுருண்டு போனது.

இன்றைய போட்டியில் பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்திலும் இ்ந்தியா அட்டகாசம் செய்து விட்டது. மேலும் அனைவரும் பயமுறுத்திய தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு, பீல்டிங் கோட்டையை தகர்த்தது இந்தியா.
டோணிக்கு பாராட்டு
இந்திய கேப்டன் டோணியின் கேப்டன்ஷிப்புக்கு முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர். அபாரமான கேப்டன்ஷிப் என்று கங்குலி கூறியுள்ளார். பீல்டிங் வியூகம், பவுலிங் வியூகம் என டோணி உண்மையிலேயே கலக்கி விட்டார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்தியாவின் வரலாற்றுச் சாதனையை மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல நகரங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடினர்.
அடுத்த போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன்
அடுத்து இந்தியா பிப்ரவரி 28ம் தேதி பெர்த்தில் நடைபெறும் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை சந்திக்கவுள்ளது. இதுவும் பகல் இரவுப் போட்டியாகும்.