
முதல் வாய்ப்பு பறிபோனது
இந்தியாவில் மிகவும் வேகமான தடகள வீராங்கனைகளில் ஒருவராக டூட்டி சந்த் உள்ளார். 2018ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2 வெள்ளிப்பதக்கம் வென்ற இவர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான தகுதிச்சுற்றில் தோல்வியை சந்தித்தார். இதற்காக கடந்த மாதம் நடைபெற்ற இந்திய கிராண்ட் ப்ரிக்ஸ் IV 100 மீ போட்டியில் 11.7 வினாடிகளில் ஓடி தனது தேசிய சாதனையை தானே முறியடித்தார். எனினும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற 11.5 வினாடிகளில் ஓட வேண்டும் என்பதால் அவரின் வாய்ப்பு போனது.

2வது வாய்ப்பு
இந்நிலையில் டூட்டி சந்த் உலக தடகள தரவரிசைப்பட்டியலின் படி ஒலிம்பிற்கு தகுதிப்பெற்றுள்ளார். ஒலிம்பிக்கிற்கு முன்னதாக வீரர்களின் சமீபத்திய டாப் 5 சிறப்பான போட்டிகளை வைத்து புள்ளிகள் அதிகரிக்கப்படும். அந்தவகையில் டூட்டி சந்த் 100 மீ பிரிவில் 44வது இடத்தையும், 200 மீ பிரிவில் 51வது இடத்தையும் பிடித்து 2 பிரிவுகளிலுமே ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றுள்ளார்.

ஒதுக்கீடு முறை
ஒலிம்பிக்கில் நேரடியாக தகுதிச்சுற்றில் வெற்றி பெற முடியாதவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு தரும் நோக்கி இந்த தரவரிசை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி 100 மீ பிரிவில் 22 இடங்களும், 200 மீ பிரிவில் 15 இடங்களும் இதற்காக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அந்த இடங்கள் மூலம் தான் டூட்டி சந்த்-க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹீமா தாஸ் இல்லை
ஆனால் இந்தியாவின் மற்றொரு நட்சத்திர வீராங்கனையான ஹீமா தாஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்குள் நுழையும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அவர் வழக்கமாக கலந்துக்கொள்ளும் 400மீ பிரிவை தவிர்த்து இந்தாண்டு 200 மீ பிரிவுக்கு முயற்சிகளை மேற்கொண்டார். இதனால் தகுதிச்சுற்று போட்டியில் 200மீட்டர்களை கடக்க 23.21 வினாடிகளை எடுத்துக்கொண்டார். இதே போல உலகளவிலான தரவரிசை பட்டியலிலும் 108வது இடத்தையே பிடித்துள்ளதால் அவரால் இந்தாண்டு ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ள முடியவில்லை.


Click it and Unblock the Notifications











