டர்பன் வி.வி.எஸ். லட்சுமணின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா, 302 ரன்கள் முன்னிலை பெற்றது. தற்போது 303 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தி வருகிறது தென் ஆப்பிரிக்கா.
டர்பனில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் இன்னிங்கஸில் இந்தியா 205 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து ஆடத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, இந்தியாவின் அபாரமான பந்து வீச்சில் சிக்கி 131 ரன்களுடன் முடங்கியது.
தொடர்ந்து தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா முதல் இன்னிங்ஸை விட சற்று பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு ஆடியது. இருப்பினும் தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சைத் தாண்டி இந்தியாவால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் போனது.
இருப்பினும் விவிஎஸ் லட்சுமண் மீண்டும் ஒரு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது சிறப்பான, நிதானமான, பொறுப்பான ஆட்டத்தால் இந்தியாவால் 300 ரன்களைத் தாண்டி முன்னிலையை கொண்டு செல்ல முடிந்தது.
லட்சுமண் அபாரமாக ஆடி 96 ரன்களைக் குவித்தார். சதமடிக்க நான்கு ரன்களே தேவைப்பட்ட போதும் அது முடியாமல் போனது.
இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 228 ரன்களைச் சேர்த்தது. இதனால் 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது தென் ஆப்பிரிக்கா ஆடி வருகிறது. கேப்டன் ஸ்மித்தும், ஆண்டர்சனும் இணைந்து அதிரடியாக ரன்களைக் குவித்து வந்தனர். ஆனால் தேனீர் இடைவேளைக்கு சற்று முன்னதாக ஸ்மித்தின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் ஸ்ரீசாந்த். அபாரமான அந்த பந்தை ஸ்மித் அடிக்க அது உயரத்தில் பறந்து வந்து, கேப்டன் டோணி கையில் அழகாக உட்கார்ந்து கொண்டது.
தேனீர் இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 233 ரன்கள் எடுக்க வேண்டும்.