பிரிஸ்பேன்: ஜோஸ் ஹஸ்ல்வுட்டின் அபார பந்து வீச்சால் நிலைகுலைந்த இந்திய அணி 408 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் பின்னர் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியாவும் தடுமாற்றத்துடன் ஆடி 221 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்திய வேகம் உமேஷ் யாதவ் அருமையாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்டில் டாசில் வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர இறுதியில், 311 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 144 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், ரஹானே 75 ரன்களுடனும், ரோஹித் ஷர்மா 26 ரன்களுடனும் இன்று ஆட்டத்தை தொடர்ந்தனர்.

ஆனால் மேற்கொண்டு 97 ரன்களை மட்டுமே சேர்த்த இந்தியா 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து உணவு இடைவேளையின்போது 408 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 81 ரன்களிலும், ரோஹித் ஷர்மா 32 ரன்களிலும் ஆட்டமிழந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளித்தனர். டோணி, அஸ்வின் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ஆடினர். இருப்பினும் அஸ்வின் 35 ரன்களிலும், டோணி 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆஸி. பவுலர் ஜோஸ் ஹஸ்ல்வுட் தனது முதல் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் 68 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதையடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியது. உமேஷ் யாதவின் ஷாட் பிட்ச் பந்து வீச்சில் துவக்க ஆட்டக்காரர் வார்னர், அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து 29 ரன்னில் அவுட் ஆகினார். வாட்சன் 25 ரன் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்து வீச்சில் தவானிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார்.
இதனிடையே சிறப்பாக ஆடிய துவக்க வீரர் ரோஜர்ஸ், உமேஷ் யாதவ் பந்து வீச்சில் டோணியிடம் கேட்ச் கொடுத்து 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதேபோல ஷான் மார்ஷ் 32 ரன்களுக்கு யாதவ் பந்து வீச்சில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா 221 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் ஸ்மித் அதிரடியாக ஆடி 88 பந்துகளில் 65 ரன்களுடனும், மிட்சேல் மார்ஷ் 22 பந்துகளில் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆஸ்திரேலியா 187 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், நாளைய ஆட்டம் இந்த போட்டியின் போக்கை நிர்ணயிக்கும் என்பதால் சுவாரசியம் அதிகரித்துள்ளது.