புவனேஸ்வர்: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர்கள் ஒரே நாளில் 4 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
22-வது ஆசிய தடகளப் போட்டிகள் ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் கலிங்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 நாடுகளின் 800 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் 95 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
இந்த நிலையில் 2-வது நாளான இன்று நடைபெற்ற போட்டியில் ஆண்கள் 1,500 மீ. ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அஜய்குமார் தங்கத்தை தட்டிச் சென்றார். அவரைத் தொடந்து 1500 மீட்டர் ஓட்டம் பெண்கள் பிரிவில் சித்ரா தங்கம் வென்றுள்ளார். 400 மீ. ஓட்டத்தின் பெண்கள் பிரிவில் ஹரியானாவைச் சேர்ந்த நிர்மலா செரோனும், ஆண்கள் பிரிவில் கேரள வீரர் முகமது அனாஷ் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
400 மீ ஓட்டம் ஆண்கள் பிரிவில் தமிழக வீரர் ஆரோக்கியாவுக்கு வெள்ளியும், பெண்கள் பிரிவில் ஜிஸ்னா மேத்யூ (கேரளா) வெண்கலமும் வென்று அசத்தி உள்ளனர்.
இந்திய வீரர்கள் இன்று ஒரே நாளில் 4 தங்கம், தலா ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளனர். இதுவரை இந்தியாவுக்கு மொத்தம் 13 பதக்கங்கள் கிடைத்துள்ளன.