ஆசிய போட்டிகள்.. முதல் தங்கத்தை வென்ற இந்தியா.. சீனாவின் சாதனையை முறியடித்து அசத்தல்!
ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா முதல் தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியா முதல் தங்கத்தை வென்றுள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாளில் இந்திய வீரர்கள் 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர். இருப்பினும் முதல் நாளில் தங்கப்பதக்கம் வெல்லவில்லையே என்ற ஏக்கம் ரசிகர்களிடையே இருந்தது.

அந்த ஏக்கத்தை இந்திய வீரர்கள் இன்று காலையிலேயே போக்கியுள்ளனர். 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர். துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் ருத்ரன்ஷ் பாட்டீல், திவ்யன்ஷ் பன்வார் மற்றும் ஐஸ்வரி தோமர் அடங்கிய இந்திய ஆடவர் அணி மொத்தமாக 1893.7 புள்ளிகள் பெற்று இந்தியா தங்கத்தை வென்றது. அதுமட்டுமல்லாமல் இந்திய வீரர்களின் வெற்றி புதிய சாதனையாகவும் மாறியுள்ளது.
இதுவரை 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் உலக சாம்பியன்ஷிப் தொடரின் போது சீனாவின் 1893.3 புள்ளிகளே அதிக புள்ளிகள் என்ற சாதனையாக இருந்தது. அதனை இந்திய அணி வீரர்கள் 1893.7 புள்ளிகள் பெற்று சீனாவின் சாதனையை முறியடித்துள்ளனர். இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா முதல் தங்கத்தை வென்றுள்ளது. அதேபோல் இன்று காலை நடைபெற்ற ஆடவர் துடுப்பு படகு காக்லெஸ் 4 பிரிவில் இந்திய வீரர்கள் வெண்கலம் வென்றனர்.
ஜஸ்விந்தர் சிங், பீம் சிங், புனித்குமார் மற்றும் ஆஷிஷ் ஆகியோர் வெண்பலப் பதக்கம் வென்று அசத்தினர். மேலும் மற்றொரு ஆடவர் துடுப்பு படகு பிரிவில் இந்தியா ஒரு வெண்கலம் வென்றுள்ளது. 4 பேர் கொண்ட இந்திய ஆடவர் அணி, துடுப்பு படகு பிரிவில் 6 நிமிடங்காள் 8.61 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டினர். இதன் மூலம் இந்தியா ஆடவர் அணி வெண்கலம் வென்று அசத்தியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பதக்கம் பட்டியல் ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என்று மொத்தமாக 8ஆக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications