
நம்ப முடியாத வெற்றி
காலிறுதி ஆட்டத்தில் மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை, 1-0 என்று வீழ்த்தியது இந்திய மகளிர் ஹாக்கி அணி. ஒட்டுமொத்த தேசமே கொண்டாடியது இந்த வெற்றியை. ஹாக்கி அதிகம் பிரபலமில்லாத இடங்களிலும் "அப்படியாமே.. ஜெயிச்சிடுச்சாமே" என்று வீசும் காற்றில் ஒவ்வொரு மூலை முடுக்கெங்கும் கரைந்தோடியது இந்த வெற்றிச் செய்தி. ஆம்! இது அத்தகைய பெரிய வெற்றி. இந்திய ஆண்கள் ஹாக்கி அணியே என்ன செய்யப் போகிறது? என்ற சந்தேகத்துடன் இருந்தவர்களுக்கு, இந்திய பெண்கள் அணி அரையிறுதி வரை சென்றுவிட்டது நம்ப முடியாத ஒன்று தான்.

சவிதா புனியா
ஆனால், இந்த வெற்றிக்கு பின்னால் இருக்கு சூத்திரம் அவ்வளவு சாதாரணமானது அல்ல. குறிப்பாக, ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் ஒவ்வொரு ராக்கெட் ஷாட்ஸ்களையும் புஸ்ஸாக்கிய வித்தைக்கு சொந்தக்காரர் இந்திய கோல் கீப்பர் சவிதா புனியா. உலகின் வல்லரசு நாடுகள் வீசும் ஏவுகணைப் போல சீறி வந்த பந்துகளை தடுத்த மாயக்காரர். இவரது நம்ப முடியாத டிஃபெண்ட் தான், இந்திய மகளிர் ஹாக்கி அணியை, திக்கற்று நின்ற குழந்தையை வாஞ்சையோடு தலையில் வைத்து சுமந்து செல்லும் தகப்பனைப் போல சுமந்து சென்று அரையிறுதியில் இறக்கிவிட காரணமாக அமைந்தது.

விதியை மாற்றி எழுதினார்
பரபரப்பான காலிறுதி ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில், ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு ஃபெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை மட்டும் ஆஸ்திரேலியா கோலாக மாற்றியிருந்தால், இந்தியாவின் தலையெழுத்து மாறியிருக்கும். இந்த கட்டுரையும் மாறியிருக்கும். ஆனால் சவிதா.. வரலாற்றை திருத்தி எழுதினார். ஏற்கனவே எழுதப்பட்டதாக எண்ணப்பட்ட விதியை மாற்றி எழுதினார். இரண்டு வாய்ப்புகளையும் தடுத்தார். இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

அழகான திமிர்
ஒரு முரட்டுத்தனமான ஆட்டம்.. "என்னை மீறி பந்து எப்படி செல்லும் என்று பார்க்கிறேன்" என்ற பயம் கலந்த ஆணவம். நீ எவ்வளவு முயற்சி செய்தாலும், எவ்வளவு யோசித்தாலும், எந்த கார்னரில் கோல் அடிக்க வேண்டும் என்று ஸ்டிராடஜி வைத்து காய் நகர்த்தினாலும், அங்கே உன்முன் நிற்பது நான் தான் என்ற திமிர் தான் சவிதாவின் அழகு.

காலால் உதைத்த நடத்துனர்கள்
இவரது தந்தை இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அளித்த பேட்டியில், " சவிதா எங்கள் கிராமத்தில் இருந்து பேருந்துகளில் ஹாக்கி பயிற்சிப் பெற செல்லும் போது Goal Keeping Kit எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. அப்போது, பேருந்தின் நடத்துனர்கள் சில நேரங்களில், அவள் பெரிய பைகள் வைத்திருந்ததன் காரணமாக பேருந்தில் ஏற விடமாட்டார்கள். சில நேரங்களில், அவள் அதை நினைத்து அழுத்திருக்கிறாள். பலமுறை நடத்துனர்கள், அவளது பைகளை கால்கள் உதைத்து உதைத்து ஓரத்தில் தள்ளியதை நினைத்து அவள் அப்போது வேதனை கொள்வாள். அதனை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை" என்று கூறியிருக்கிறார்.

மாறிய கனவு
அதுமட்டுமல்ல, சவிதா தனது தந்தையிடம் ஒரு மிட் ஃபீல்டராக அல்லது முன்கள வீரராக விளையாடவே விருப்பம் தெரிவித்து இருக்கிறார். ஆனால், பயிற்சியின் போது தான், அவரது பந்துகளை தடுக்கும் திறன்களை கண்டு அவர் கோல் கீப்பர் ஆக்கப்பட்டிருக்கிறார். முதலில் பெரிதாக விருப்பம் இல்லாமல் கோல் கீப்பிங் பணியை செய்தவர், அதன் பிறகு ஆர்வமுடன் விளையாடத் துவங்கினார்.

பத்தோடு பதினொன்றாய்
எந்த பேருந்து நடத்துனர்கள் தங்கள் கால்களால் சவிதாவின் பைகளை எட்டி உதைத்தார்களோ, இன்று அதே பைகளுக்கு சொந்தக்காரார் தான், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியை அரையிறுதிக்கு கூட்டிச் சென்றிருக்கிறார். நம்மை சுற்றியும் எத்தனையோ சவிதாக்களும், வட்டு எறிதலில் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த கமல்ப்ரீத் கவுர்களும், மீராபாய் சாணுக்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆனால், படிப்பு, வேலை, கல்யாணம் என்ற வாழ்க்கை இலக்கணத்தையும் மீறி நாம் அவர்களை ஊக்குவித்தால் மட்டுமே அவர்கள் கண்களுக்கு தெரிவார்கள். இல்லையெனில் பத்தோடு பதினொன்றாய் அவர்களும் இந்த அவசர உலகில் இயந்திரங்களாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டியது தான்.


Click it and Unblock the Notifications