லடாக்: இந்தியாவில் ஐஸ் ஹாக்கி விளையாட்டு ஒரு புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்திய ராணுவத்தின் சிறப்பு மலைப் படைப்பிரிவான லாடாக் சாரணர்கள் இதற்கு முன்னிலை வகிக்கின்றனர். நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஐஸ் ஹாக்கியில் அவர்களின் தனித்துவத்தை காட்ட இதுவே சிறந்த தருணம். 2026 கேலோ இந்தியா குளிர்காலப் போட்டியின் (KIWG) முதல் கட்டம் லேஹ்-இல் நடந்து வரும் நிலையில், இதில் ஐஸ் ஹாக்கி மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டுகளில் ராணுவத்தின் லாடாக் சாரணர்கள் குழு மீண்டும் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறது.
குடியரசு தினமான திங்கட்கிழமை அன்று ஆண்கள் இறுதிப் போட்டியில் எதிர்பாராத போட்டியாளரான சண்டிகருடன் ராணுவம் அணி மோதுகிறது. ஆனால், வெற்றிகள், பதக்கங்களுக்கு மேலாக, பனி மைதானத்திற்கு வெளியே அவர்களின் முயற்சிகளே முக்கியத்துவம் பெறுகின்றன. லேஹ்-ன் பனிச்சூழ்நிலையையும் தாண்டி, இந்திய சமவெளி, கடலோரப் பகுதிகளிலும் பனி ஹாக்கியைப் பிரபலப்படுத்துவதே அவர்களின் ஆர்வம்.

1970களின் பிற்பகுதியில் லாடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் ஐஸ் ஹாக்கியை பொழுதுபோக்கிற்காக விளையாடத் தொடங்கினர். அப்போது உபகரணங்கள் இல்லை. 1980களின் பிற்பகுதியில்தான் இயற்கை பனி மைதானங்களை உருவாக்கி, விலையுயர்ந்த உபகரணங்களை இறக்குமதி செய்தனர். (ஒரு வீரருக்கு ₹4 லட்சம் வரை செலவாகும்). 2000ஆம் ஆண்டில் முழு காலாட்படையாக மாறியதும், விளையாட்டில் அவர்களின் தீவிரமும், முயற்சியும் பன்மடங்கு பெருகின.
தற்போது, இந்தியாவில் ஒலிம்பிக் தரத்திலான இரண்டு செயற்கை பனி மைதானங்கள் மட்டுமே உள்ளன; ஒன்று டேராடூனிலும், மற்றொன்று லேஹ்-இன் நவாங் டோர்ஜே ஸ்டோப்டன் உள்விளையாட்டு அரங்கிலும் அமைந்துள்ளன.
2026 கேலோ இந்தியா குளிர்காலப் போட்டிகளில் ராணுவ அணிக்காக விளையாடும் கேப்டன் பார்த்த் ஜக்தாப் இது குறித்து, "பனி ஹாக்கியை உண்மையாகவே பிரபலமான விளையாட்டாக மாற்ற, நாடு முழுவதும் இதுபோன்ற மைதானங்கள் இன்னும் அதிகமாகத் தேவை. இப்போது, இந்த விளையாட்டு பெரும்பாலும் லேஹ் பகுதிக்குள் மட்டுமே கட்டுப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் இதை எடுத்துச் செல்ல வேண்டும், இதே விளையாட்டை வளர்க்கும்" என்று குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு மும்பையில் சிறந்த விளையாட்டுச் சாதனைகளுக்காக மதிப்புமிக்க விருது பெற்ற கேப்டன் ஜக்தாப், கேலோ இந்தியாவின் முயற்சிகளையும் பாராட்டினார். "கேலோ இந்தியாவின் ஈடுபாடு பல வழிகளில் உதவியுள்ளது. ஊடகங்கள் மூலம் ஐஸ் ஹாக்கி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மேலும், இந்த விளையாட்டை நாட்டில் பிரபலமாக்க செய்யப்பட வேண்டியவை குறித்த தெளிவும் பெருகியுள்ளது," என்று அவர் கூறினார்.
பனி மைதானம் அமைப்பது மிகவும் செலவு பிடிக்கும். ஒரு அடிப்படை மைதானத்திற்கே ₹15 கோடி வரை செலவாகலாம். 5,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய உட்புற மைதானத்திற்கு ₹40-50 கோடி வரை தேவைப்படலாம். இவை மிகப் பெரிய தொகைகள் என்பதால், பெருநிறுவனங்களின் ஆதரவு இன்றியமையாதது. ரிலையன்ஸ், அதானி, டாடா போன்ற பெருநிறுவனங்கள் ஆதரவு அளித்தால், இந்தியாவின் பனி ஹாக்கி சூழல் விரைவாக மாறி லேஹை தாண்டிப் பரவும்.
பெருநிறுவன ஆதரவு யோசனையை லாடாக் சாரணர்களின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ளனர். ராணுவ வீரர்கள் நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் பணிக்குத் தங்களை அர்ப்பணித்தவர்கள். ஆனால், சில சமயங்களில் கடமையைத் தாண்டி பொறுப்புகளை ஏற்கிறார்கள், அதற்கு ஐஸ் ஹாக்கி ஒரு சிறந்த உதாரணம்.
கடந்த ஆண்டு, லாடாக் சாரணர்கள் தேசிய பெண்கள் அணிக்கு அளித்த கடைசி நேர நிதி பெரிதும் உதவியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த IIHF மகளிர் ஆசியக் கோப்பையில் இந்திய பெண்கள் அணி தனது முதல் வெண்கலப் பதக்கத்தை வென்றது. பனிச்சிறுத்தைகள் அல்லது பனி வீரர்கள் என்று செல்லப்பெயர் கொண்ட லாடாக் சாரணர்கள் தங்கள் லட்சியத்தில் உறுதியாக உள்ளனர். அவர்களின் முயற்சிகள் உலக பனி ஹாக்கி தளத்தில் இந்தியாவுக்கு அங்கீகாரம் தேடித்தரும் என நம்புகிறார்கள்.