டெல்லி : இந்திய இராணுவத்தில் ஹவில்தாராக இருக்கும் அனுஜ் குமார் தாலியான் தென் கொரியாவில் நடந்த 11வது உலக பாடிபில்டிங் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
அவருக்கு இந்திய இராணுவத்தின் மெட்ராஸ் இஞ்சினியர் குழு சிறப்பான வரவேற்பு அளித்தது. அலங்கரிக்கப்பட்ட காரில் வலம் வந்தார் அனுஜ் குமார்.

தென் கொரியாவில் நடைபெற்ற உலக பாடிபில்டிங் சாம்பியன்ஷிப் தொடர் நவம்பர் 5 முதல் 11 வரை நடைபெற்றது. இந்த தொடரின் இந்தியா சார்பாக இந்திய இராணுவத்தில் மெட்ராஸ் இஞ்சினியர் குழுவில் இடம் பெற்றுள்ள அனுஜ் குமார் பங்கேற்றார்.
100+ கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அனுஜ் குமார் அதில் தங்கப் பதக்கம் வென்றார். தங்கள் குழுவை சேர்ந்த வீரர் தங்கம் வென்றதை கொண்டாட முடிவு செய்த மெட்ராஸ் இஞ்சினியர் குழு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது.
இதே உலக பாடிபில்டிங் சாம்பியன்ஷிப்பில் குழு பிரிவில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்தது. சித்தரேஷ் நடேசன் மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.