சென்னை: உலக தடகள அமைப்பின் சார்பில் இந்தாண்டின் "சிறந்த பெண்" என்ற விருது இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்த அஞ்சு பாபி ஜார்ஜ், தடகள பிரிவில் பல்வேறு பெருமைகளை இந்தியாவுக்கு பெற்று கொடுத்தவர்.

உலக சாம்பியன்ஷிப், உலக தடகளப் போட்டி, காமென்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய சாம்பின்ஷிப் போட்டி என பதக்கங்கள் நீண்டு கொண்டே செல்லும்.
கடந்த 2003ஆம் ஆண்டு பாரீசில் நடந்த உலக தடகளப் போட்டியில் 6 .7 மீட்டர் தூரம் நீளம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன்பிறகு விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த அஞ்சு ஜார்ஜ், தற்போது இந்திய தடகள சம்மேளனத்தின் மூத்த துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
தன்னைப்போன்றே பல வீராங்கனைகள் உருவாக வேண்டும் என நினைத்த அவர், 2016 ஆம் ஆண்டில் இளம் பெண்களுக்கான பயிற்சி அகாடமியை தொடங்கினார். இளம் விளையாட்டு வீராங்கனைகளை கண்டறிந்து அவர்களின் திறமையை வளர்த்து வருகிறார். இவரின் இந்த முயற்சிகளை பாராட்டும் விதமாக உலக தடகள அமைப்பின் சார்பில் இந்தாண்டின் "சிறந்த பெண்" என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அஞ்சு ஜார்ஜ், எனது முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம் இது, அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். அஞ்சு ஜார்ஜுக்கு பிறப்பில் இருந்தே ஒரே ஒரு சிறுநீரகம் தான் உள்ளது. விளையாட்டு துறைக்குள் நுழைந்த பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் தான் அவருக்கு ஒரு சிறுநீரகம் இல்லாததே தெரியும். எனினும் சற்றும் மனம் தளராத அஞ்சு, பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.