ஆசிய விளையாட்டுப் போட்டிகள்.. தங்கும் அறைகள் வசதியாக இல்லை.. ஆனால் சாப்பாடு சூப்பர்!
பாலெம்பங் : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தங்குவதற்கு பாலெம்பங் மற்றும் ஜகார்தா ஆகிய நகரங்களில் சிறப்பு கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கே இந்திய வீரர்கள் உட்பட, பல நாட்டு வீரர்களும் தங்கி உள்ளனர். மற்ற வசதிகள் சிறப்பாக இருந்தாலும், தங்கும் அறைகள் சிறியதாக இருப்பதாக வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி இந்திய வீரர் ஒருவர் கூறுகையில், “அறைகள் சிறியதாக உள்ளது. மூன்று படுக்கைகள் மற்றும் ஒரு குளியலறை உள்ளது. நிறைய இடம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இங்கே கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது. ஆனாலும், சமாளித்துக் கொள்கிறோம். எல்லோருக்கும் இதே போல தான் (அறைகள்) இருக்கிறது” என தெரிவித்தார்.

இடவசதி குறைவாக இருந்தாலும், உணவுகள் விஷயத்தில் இந்தோனேசியா சிறப்பான ஏற்பாட்டை செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அங்கே இந்தோனேசிய உணவுகள் மட்டுமின்றி, பல நாட்டு உணவு வகைகளும் கிடைக்கின்றன என தெரிவித்துள்ளனர். இந்திய உணவுகளும் கிடைப்பதாக இந்திய வீரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்திய வீரர் ஒருவர், “ஒரு விளையாட்டு வீரராக அனைத்து வகை உணவுகளையும் உட்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். எனினும், இந்திய உணவும் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. சில சமயம், இந்திய உணவு மட்டும் சாப்பிடத் தோன்றும். எனவே, உணவைப் பொறுத்தவரை எந்த குறையும் இல்லை. அறைகள் தான் சிறியதாக உள்ளது, எனினும், அது பெரிய குறையில்லை” என உணவு மற்றும் அறைகள் பற்றித் தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் முதன்முறையாக பாலெம்பங் மற்றும் ஜகார்தா என, இரண்டு நகரங்களில் வீரர்கள் தங்குவதற்கான கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி பேசிய இந்தோனேசிய அதிகாரிகள், “இரண்டு நகரங்களில் நடத்துவது சவாலான விஷயம் தான். ஆனால், இரண்டு நகரங்களுக்கும் பொருளாதார ரீதியாக பலனளிக்கும் என்பதால், இதுவே நடைமுறையாக கூட மாறி விடும்” என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications